சீவி சிங்காரித்து சிலிர்த்துக்கொண்டு போன தேஜஸ் எக்ஸ்பிரஸ்...நாரி நசநசத்துபோய் திரும்பி வந்த கதை..!
தேஜஸ் எக்ஸ்பிரஸில் காணாமல் போன ஹெட்ஃபோன்கள், உடைக்கப்பட்ட எ.ல்.சி.டி திரை, நாறிப்போன கழிவறை.
மும்பை-கோவா இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணத்தை துவக்கிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் மும்பை வந்ததை பார்த்து இரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

நாட்டின் அதிவேக இரயில்சேவையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே நிர்வாகம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலை மும்பை - கோவா இடையே அறிமுகப்படுத்தியது.

தானியங்கி கதவுகள், தாராள இடம் தரும் இருக்கைகள், எல்.சி.டி திரைகள், வைஃபை வசதி, பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி கேமரா என ஆடம்பர பயணத்திற்கான சகல வசதிகளும் இதில் உள்ளன.

அசத்தலான உட்புற கட்டமைப்பை பெற்றுள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் கடந்த 22ம் தேதி தனது முதல் பயணத்தை மும்பை முதல் கோவா வரை தொடங்கியது.
20 பெட்டிகள் கொண்ட இந்த இரயிலில் உயர் வகுப்புக்கான எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ், மற்றும் சாதாரண வகுப்பாக சேர் கிளாஸ் என இரண்டு பிரிவுகள் உள்ளன.

பயணிகளுக்கு எந்தவித குறையுமின்றி பயணிக்கவைக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் தண்டவாளங்களில் பறக்கும் அதிவேக இரயிலாகும்.
கடந்த 22ம் தேதி கோவாவில் இருந்து தனது முதல் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை திரும்பிய தேஜஸ் எக்ஸ்பிரஸை பார்த்த இரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எல்.சி.டி திரைகள் உடைக்கப்பட்டு இருந்தது, அதில் பொருத்தப்பட்டு இருந்த ஹெட்ஃபோன்கள் பல திருடப்பட்டு இருந்தன.
கழிவறைகள் முகம் சுழிக்கவைக்கம் அளவிற்கு அசுத்தம் செய்யப்பட்டு இருந்தன. மொத்தமாக இரயிலே சிதறடிக்கப்பட்டு இருந்தது.

ரயிலில் பயணம் செய்த பயணிகளிடமிருந்த வந்த புகாரை அடுத்து, தேஜஸ் இரயில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை இரயில்வே துறை நிர்வாகம் தெரிந்துக்கொண்டனர்.

மேலும், பயணிகள் பலர், இரயிலில் தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். வைஃபை வசதிகளும் சரியாக இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

ஆடம்பர இரயில்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நேருவது இந்தியாவில் புதிதல்ல. ஏற்கனவே 2016ல் வாரணாசிக்கு விடப்பட்ட ’மாஹாமன எக்ஸ்பிரஸ்’ இரயிலுக்கும் இதே கதி தான் ஏற்பட்டது.

மும்பை - கோவா இடையே வாரம் ஒருமுறை இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய பலரும் காத்திருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தால், தேஜஸ் இரயிலில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸின் தற்போதைய நிலைக்கு காரணம் பயணிகள் தான் எனவும். அதற்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என இணையதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் இனி நடைபெறாத வகையில் இந்திய ரயில்வே துறை பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கவேண்டும் என்பதும் பலரது கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications