புதிய வரலாறு படைத்தது தேஜஸ் போர் விமானம்... விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்கி புதிய சாதனை!
முதல்முறையாக விமானம் தாங்கி கப்பலில் தேஜஸ் போர் விமானம் வெற்றிகரமாக தரை இறங்கி சாதனை படைத்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் ஏற்கனவே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. தேஜஸ் போர் விமானங்கள் அடங்கிய முதல் விமானப்படை பிரிவு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டது.

இந்த நிலையில், தேஜஸ் போர் விமானம் கடற்படை பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்குவதற்காக விசேஷமான அம்சங்களுடன் தேஜஸ் விமானம் மாற்றங்கள் செய்யப்பட்டது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(DRDO), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து தேஜஸ் போர் விமானத்தின் கடற்படை மாடலை தயாரித்தன.

கடந்த சனிக்கிழமை காலை 10.01 மணியளவில் இந்த புதிய தேஜஸ் போர் விமானம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது தேஜஸ் போர் விமான தயாரிப்பு வரலாற்றில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
போர் விமானங்கள் தரையில் உள்ள போதுமான தூரமுடைய ஓடுதளங்களில் இறக்கும்போதே மிக கவனமாக கையாள வேண்டி இருக்கும். இந்த நிலையில், விமானம் தாங்கி போர்க்கப்பலில் உள்ள 200 மீட்டர் மட்டுமே நீளமுடைய ஓடுதளத்தில் கச்சிதமாக தரை இறங்கியுள்ளது தேஜஸ் போர் விமானம்.

இவ்வாறு தரை இறக்கும்போது விமானத்தில் உள்ள கொக்கி போன்ற அமைப்பு, கப்பலில் இருக்கும் உறுதியான 3 இரும்பு கம்பி வடங்களில் ஏதேனும் ஒன்றை பற்றிக் கொள்ளும். அப்போது விமானம் வேகம் சட்டென குறைவதுடன், குறிப்பிட்ட இடத்திற்குள் விமானம் நிறுத்தப்பட்டு விடும்.

ஒருவேளை கப்பலின் ஓடுதளத்தில் பொருத்தப்பட்ட இரும்பு கம்பி வடத்தை விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் கொக்கி அமைப்பு பற்றிக் கொள்ளவிட்டால், மீண்டும் வேகமெடுத்து விமானம் பறக்கத் துவங்கிவிடும். இது அவசரத்திற்கான ஏற்பாடாக பின்பற்றப்படுகிறது.

ஆனால், தேஜஸ் போர் விமானம் எதிர்பார்த்தபடியே, சரியாக தரை இறங்கியது. மேலும், விமானத்தில் இருந்து தேஜஸ் போர் விமானம் மிக குறைவான நீளமுடைய ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக பறந்தது.

இதையடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளையடுத்து, விமானம் தாங்கி போர்க்கப்பலில் தரை இறங்கும் வசதி கொண்ட போர் விமானத்தை உருவாக்கியுள்ள ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை சேர்ப்பதற்கு கடற்படை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தேஜஸ் போர் விமானத்தின் எஞ்சின் போதிய திறன் இல்லை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடுக்கி வந்தது. இந்த நிலையில், கடற்படையின் கூற்றை தவிடுபொடியாக்கும் விதத்தில், புதிய சாதனையை படைத்துள்ளது தேஜஸ் போர் விமானம்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஏற்கனவே ரஷ்ய தயாரிப்பான மிக்-29கே போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தற்போது தேஜஸ் போர் விமானங்களும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் சேர்க்கப்பட இருக்கின்றன. இது இந்திய போர் விமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை வரலாற்றில் பெரிய நிகழ்வு என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








