தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு 5 கோடியில் ஆடம்பர பஸ்!!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்காக ரூ.5 கோடி மதிப்பில் ஆடம்பர பஸ் ஒன்று வாங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்ததாக அந்த பஸ் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.
தெலங்கானா பகுதிகளில் குடி நீர் வினியோகத்தை ஆய்வு செய்யவும், புதிய நலத்திட்டங்களை துவங்கி வைக்கவும் இந்த பஸ்சில் முதல்வர் சந்திரசேகர ராவ் பயணிக்க உள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புல்லட் புரூஃப் வசதி
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவிற்கு வாங்கப்பட்டிருக்கும் பஸ் புல்லட் புரூஃப் வசதி கொண்டது. கண்ணி வெடித்தாக்குதல்களிலிருந்து பயணிகளை காக்கும் விதத்தில் அடிப்பாகம் விசேஷ பாகங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதர வசதிகள்
மல்டி ஆக்சில் பஸ்சில் ஆடம்பர வசதிகளுடன் உட்புறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குளு குளு வசதி, படுக்கை அறை, கூட்டங்களுக்கான சிறிய அரங்கம், ரெஸ்ட் ரூம் போன்றவை இந்த பஸ்சில் உள்ளன.

நடமாடும் அலுவலகம்
இந்த பஸ்சில் இன்டர்நெட் வசதியும் இருக்கிறது. அவரது பயணங்களின்போது அலுவல்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக விசேஷ வசதிகளுடன் செய்யப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேசுவதற்கான மேடை
இந்த பஸ்சிலிருந்தே கூட்டங்களில் பேசுவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான படிக்கட்டுகளுடன் இந்த பஸ் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், புதிய திட்டங்களை அவர் பஸ்சிலிருந்தபடியே துவங்கி வைக்க முடியும். மேலும், மாதத்திற்கு 10 நாட்கள் அவர் பஸ்சில்தான் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடும் எதிர்ப்பு
முதல்வர் சந்திர சேகரராவிற்கு 5 கோடியில் ஆடம்பர பஸ் வாங்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "எதற்காக அவருக்கு பஸ். அதுவும் அந்த பஸ் 5 கோடி பெறுமானம் கொண்டதா.... அந்த பணத்தை ஏழைகளின் நலனுக்காக அல்லவா பயன்படுத்தியிருக்க வேண்டும்," என்று அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹனுமந்த ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பென்ஸ் பஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மல்டி ஆக்சில் பஸ்சை வாங்கி அதனை விசேஷ வசதிகளுடன் மாற்றியுள்ளனர். ஜேசிபிஎல் பாடி பில்டிங் நிறுவனம் பஸ்சில் விசேஷ வசதிகளுடன் மாற்றியுள்ளது.



Click it and Unblock the Notifications