முதலமைச்சரின் தாராள மனசு... அரசு அதிகாரிகளுக்கு 32 சொகுசு கார்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், அரசு அதிகாரிகளுக்கு 32 சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலத்தில் கூடுதல் கலெக்டர்கள் 32 பேருக்கு, கியா கார்னிவல் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 32 கார்களும் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமங்களில் ஆய்வு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கியா கார்னிவல் கார்கள், கூடுதல் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த கார்களை பார்வையிட்டார். நகர்ப்புற மற்றும் கிராம மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆய்வு செய்தார். இதன்பின் அவரது அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து துறை அமைச்சர் புவாடா அஜய் குமார் கியா கார்னிவல் கார்களை, கூடுதல் கலெக்டர்களிடம் ஒப்படைத்தார்.

ஒவ்வொரு கியா கார்னிவல் காரையும் வாங்குவதற்காக அரசு தலா 30 முதல் 31 லட்ச ரூபாய் வரை செலவிட்டுள்ளது. ஆனால் கியா கார்னிவல் கார்கள் எங்கே? எப்போது? கொள்முதல் செய்யப்பட்டன என்பது தொடர்பாக தெலங்கானா மாநில அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தெலங்கானா மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இத்தகைய விலை உயர்ந்த கார்களை வாங்கியிருக்க கூடாது என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷ்ரவன் குமார் டஸோஜூ கூறுகையில், ''தெலங்கானா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போரில் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும், அரசு பேருந்துகளை வாங்குவதற்கும் பணம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கூடுதல் கலெக்டர்களுக்காக, 32 கியா கார்னிவல் கார்களை தெலங்கானா முதலமைச்சர் வாங்கியுள்ளார்'' என்றார். தெலங்கானா மாநில அரசு மக்கள் வரிப்பணத்தை பொறுப்பற்ற முறையில் வீணாக்கியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்தியாவில் மொத்தம் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், கார்னிவல் ஒன்றாகும். இதுதவிர செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. கார்னிவல், சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதனை பிரீமியம் மாடலாக கியா நிறுவனம் நிலைநிறுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை உயர்ந்த கார் இதுதான். ஆனால் இந்திய சந்தையில் கியா கார்னிவல் காருக்கு நேரடி போட்டியாளர் என எந்த மாடலும் இல்லை. எனினும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு விற்பனையில் கியா கார்னிவல் சவால் அளித்து வருகிறது.

கேபினில் தாராளமான இடவசதி, பல்வேறு சொகுசு வசதிகள் ஆகிய காரணங்களால் கியா கார்னிவல் புகழ்பெற்று விளங்குகிறது. அதிகம் பேர் பயணம் செய்வதற்கு சொகுசான எம்பிவி காரை எதிர்பார்ப்பவர்களின் முக்கியமான தேர்வாக கியா கார்னிவல் உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஓரளவிற்கு விற்பனை எண்ணிக்கையை கியா கார்னிவல் பதிவு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








