ரொம்ப நாளா அபராதத்தை செலுத்தாம இருக்கீங்களா! இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.. 60-90 சதவீதம் சலுகை அறிவிப்பு!
போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க டிஸ்கவுன்ட் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எங்கு இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது? எவ்வளவு சதவீதம் சலுகை வழங்கப்பட இருக்கின்றது? என்பது குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு, மீண்டும் அந்த வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அபராதமும் ஒன்றாகும். இத்தகைய அபராதத்தையே வசூல் செய்ய விநோத யுக்தியை ஓர் மாநில அரசு கையில் எடுத்து இருக்கின்றது. அதுதான் சிறப்பு சலுகை திட்டம்.

இதுநாள் வரை அபராதம் விதிக்கப்பட்டு செலுத்தப்படாமல் இருக்கும் அந்த அபராதத்தை வசூலிக்கவே அரசு சிறப்பு தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. தெலங்கானாவிலேயே இதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்றே தெலங்கானா அரசு அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் அரசாங்கம் அந்த மாநிலத்தில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பெரும் தள்ளுபடியை டிராஃபிக் அபராதங்களுக்கு அறிவித்து இருக்கின்றது. இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதிற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், இந்த சிறப்பு தள்ளுபடி சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். இன்று தொடங்கி (டிசம்பர் 26) அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகைக் கிடைக்கும். தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்பட்ட அபராதத் தொகையில் 90 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கின்றது.
பாக்கி இருக்கும் 10 சதவீதத்தை மட்டுமே அரசுக்கு செலுத்தினால் போதும் என கூறப்பட்டு உள்ளது. இதேபோல், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான அபராதத்திற்கு 80 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், மீதுள்ள 20 சதவீதத்திற்கான அபராதத்தை மட்டுமே இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்.
கார்கள் மற்றும் பிற ஹெவி வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அபராதங்களுக்கு 60 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிறப்பு தள்ளுபடி அரசு வாகனங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தெலங்கானா அரசுக்கு சொந்தமான பொது போக்குவரத்து வாகனங்கள் சிலவற்றிற்கும் போக்குவரத்து விதியை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த வாகனங்களுக்கே தற்போது தள்ளுபடி பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் இந்த அபராத செல்லாண் தள்ளுபடியும் ஒன்றாகும். இதையே ஆட்சியை அமைத்த சில தினங்களிலேயே புதிய அரசு அமல்படுத்தி இருக்கின்றது. இந்த அபராத செல்லாண்களை தெலங்கானா அரசின் இ-செல்லாண் வலைதளத்தின் வாயிலாகச் செலுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஏற்கனவே நிலுவையில் இருக்கும் அபராத செல்லாண்களுக்கு இந்த அறிவிப்பு பொந்தும். மாநிலத்தில் நிலுவையில் இருக்கும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத செல்லாண்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனாலேயே அதைக் குறைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. சமீபத்திய புள்ளி விபரங்களின்படி மாநிலத்தில் சுமார் 2.4 கோடி அளவிலான அபராத செல்லாண்கள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இது சென்ற ஆண்டு மார்ச் மாத 31ஆம் தேதி நிலவரப்படியிலான எண்ணிக்கை ஆகும். இதுபோன்ற அபாரத செல்லாண்களுக்கு தெலங்கானாவில் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு முதல் முறையல்ல. சென்ற ஆட்சி காலத்திலும் இதேபோல் மாபெரும் சிறப்பு சலுகைகள் அபராதத்தை வசூலிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு 75 சதவீத தள்ளுபடியும் மற்ற வாகனங்கள் அனைத்திற்கும் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் வாயிலாக சுமார் 300 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது. வெறும் 45 நாட்களிலேயே இத்தனை கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிட்டியது.
மேலும், அப்போதைய நிலவரப்படி 65 சதவீதம் அபராத செல்லாண்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கின்றது. இந்த முறையும் இதேபோல் பெரும் எண்ணிக்கைக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சிறப்பு தள்ளுபடியை புதிய காங்கிரஸ் அரசாங்கம் அறிவித்து இருக்கின்றது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு பக்கம் மத்திய அரசு நாட்டில் அரங்கேறும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறலால் அரங்கேறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழலிலேயே விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்பட்ட அபராத செல்லாண்களுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்து தெலங்கானா அரசு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், மாநில அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








