‘குடி’மகன்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸாருக்கு அதிகாரம் இல்லை!! தெலுங்கானா ஹைகோர்ட் பரபரப்பு கருத்து
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய முடியாது என்ற பரபரப்பு கருத்தினை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185-இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டையும் வழங்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது.

மது அருந்திவிட்டு வாகன ஓட்டி வாகனத்தை இயக்கும் பகுதியையும் பொறுத்தும், அவர் போலீஸாரிடம் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தும் மற்றும் அவர் ஆல்கஸாலை உட்கொண்டிருக்கும் அளவை பொறுத்தும் இந்த தண்டனைகள் மாறக்கூடும். ஒருவர் அவரது உடலில் 100 மி.லி இரத்தத்திற்கு 30 மி.கி அதிகமாக ஆல்கஹாலை உட்கொண்டு வாகனத்தை ஓட்டி வந்தால், அவர் மேற்கூறப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரியவராகிறார்.

இவ்வாறு சிறைத்தண்டனைகளும், அபராதங்களும் விதிக்கப்பட்ட போதிலும் டிடி எனப்படும் ட்ரங்க் அண்ட் ட்ரைவ் வழக்குகள் நம் நாட்டில் குறைந்தப்பாடில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது தெலுங்கானா மாநில உயர்நீதி மன்றம், குடித்து வாகனம் ஓட்டுபவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய போலீஸாருக்கு அதிகாரமில்லை என தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட ஆல்கஹால் அளவை தாண்டாமல் இருப்பவருடன் போலீஸார் அவரை அனுப்பி வைக்கலாம் எனவும் கூறியுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம்/ சிறைத்தண்டனை வழங்கலாம் என்று மட்டுமே மோட்டார் வாகன சட்டம் பிரிவு 85 கூறுகிறதே தவிர்த்து, அவரது வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என கூறவில்லை.

இதனால் போலீஸாரும் முடிந்தவரையில் வாகனத்தை பறிமுதல் விரும்புவது இல்லை. ஆனால் நிலைமை கை மீறி சென்றால், அதாவது ஆல்கஹால் உட்கொண்டு தனியாக வந்தவர் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாத சூழல் உருவாகும்போதும் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் போலீஸாரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களிலும், கை கலப்புகளிலும் ஈடுப்படும்போதும் தான் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு ஏற்படுகிறது.

தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போலீஸாரால் வாகன பறிமுதலுக்கு உள்ளானவர்கள் தொடுத்துள்ள இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே லக்ஷமண், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்தவருடன் யாரும் உடன் வரவில்லை எனில், போலீஸார் சம்பந்த நபரது வீட்டிற்கோ அல்லது உறவினருக்கோ தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து அவரிடம் வாகனத்தை கொடுத்து அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய நீதிபதி, வாகனத்தை வாங்க யாரும் வரவில்லை என்றால் மட்டுமே போலீஸார் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவரின் வாகனத்தை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அதன்பின் உரிமையாளரிடமோ அல்லது அங்கரீக்கப்பட்ட நபரிடமோ வழங்கிவிட வேண்டும் என கூறியுள்ளார்.

அதேநேரம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் பிடிப்பட்ட வாகன ஓட்டியை அபராத தொகையை செலுத்திய பின்னரும் தொடர்ந்து வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என அரசாங்க வக்கீல் ஜி ஸ்ரீகாந்தின் வாதத்தினை நீதிபதி முழுமையாக ஏற்றுக்கொண்டார். வாகனத்தை திரும்ப வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லக்ஷ்மண், "ஓட்டுநர் அல்லது உரிமையாளர் அல்லது இருவர் மீதும் வழக்கு தொடர வேண்டிய முடிவுக்கு ஒரு போலீஸ் அதிகாரி வந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அவர்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகு, வாகனத்தை காவலில் வைத்திருக்கும் அதிகாரி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு விடுவிக்க வேண்டும்" என்றார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையினை போலீஸாரிடம் இருந்து பெற வேண்டும் என மாஜிஸ்திரேட்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ட்ரங்க் அண்ட் ட்ரைவ் வழக்கில் சிக்கியவரின் வாகனத்தை வாங்க யாரும் வரவில்லை என்றால் மட்டுமே இந்த நடவடிக்கைகளை போலீசார் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி கேட்டு கொண்டுள்ளார். மேலும் வாகனங்களை பறிமுதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிபதி எச்சரித்துள்ளார்.

தெலுங்கானா உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவிக்க, சென்னை உயர்நீதிமன்றம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக, மோட்டார் வாகன சட்டம் பிரிவி-185இல் திருத்தங்களை செய்யுமாறு கடந்த சில வருடங்களாக ஒன்றிய அரசிற்கு உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஹைகோர்ட் வெளியிட்டிருந்த கருத்தில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் அளவிற்கு தண்டனை வழங்கும் வகையில் MVA பிரிவு-185-இல் திருத்தம் செய்ய வேண்டும் என்பதுபோல் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








