102 செல்லான்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த கார் ஓட்டுநர்: சிக்கியது எப்படி?
ஹைதராபாத்தில் 102 வழக்குகளுக்கு அபராதம் கட்டாமல் ஏமாற்றி வந்த கால் டாக்ஸி ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைத் தண்டிக்கும் விதமாக, அந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு போலீஸாரால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த காலங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு கைப்பட ரசீது எழுதி, அதில் சீல் குத்தி போலீஸார் வழங்கி வந்தனர்.

இந்த ரசீனாது, வாகன ஓட்டி, கமிஷனர் அலுவலகம், கவுன்டர் பைல் என மூன்று நகல்களாக எழுதப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. இந்த ரசீது நடைமுறையில் போக்குவரத்து போலீஸார் முறைகேடுகள் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, முறைகேட்டை தவிர்க்கும் விதமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 'இ-செல்லான்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், போக்குவரத்து காவலில் ஈடுபடும் போலீஸாருக்கு நவீன வசதிகளுடன் கூடிய 'ஹேண்ட் கெல்டு' என்ற கருவி வழங்கப்பட்டன.

இந்தக் கருவி வட்டார போக்குவரத்து அலுவலக 'சர்வர்'களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால், போக்குவரத்து விதிமீறல்களிலம் ஈடுபடும் வாகனங்களின் எண்ணை அந்த கருவியில் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர், என்ஜின் எண், வீட்டின் முகவரி உள்பட அனைத்து தகவல்களும் உடனடியாக அதில் தெரிந்து விடும். மேலும், திருட்டு வழக்கில் தேடப்படும் வாகனங்கள், பெயர் மோசடி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவலையும் இந்த கருவி மூலம் எளிதில் கண்டுபிடித்து முடியும்.

மேலும், இந்தக் கருவிமூலம் போலீஸார் முறைகேடுகளில் ஈடுபடுவது கணிசமாக தவிர்க்கப்படும். இந்த நவீன 'ஹேண்ட் கெல்டு' கருவியில் ஜி.பி.ஆர்.எஸ்., ஜி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இவை போலீஸாரின் இருப்பிடம், நடவடிக்கை உள்ளிட்டவையை உயர் அதிகாரிகள் எளிதில் கண்காணிக்க முடியும்.

இதைத்தொடர்ந்து, நோ பார்க்கிங்கில் வாகனத்தை பார்க்கிங் செய்தல், லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 78 போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்கள் இந்தக்கருவியில் உள்ளன. இவ்வாறு, விதிமீறல்களில் ஈடுடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை ரசீது பிரிண்ட் எடுத்து வழங்கப்படும்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கால் டாக்ஸி ஒன்றை போலீஸார் மடக்கி சோதனை செய்துள்ளனர். மேலும், அந்த வாகனத்தின் பதிவெண்ணை ஹேண்ட் கெல்டு கருவி மூலம் பதிவிட்டு ஆராய்ந்துள்ளனர்.

அப்போது, அந்த வாகனத்தின் மீது 102 வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில், நோ பார்க்கிங் போன்ற சிறு வழக்குகள் மட்டும் 95 சதவிகிதத்துக்கும் மேலாக இருந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலிஸார், அதனை இயக்கிவந்த தவ்ரிநாயக்கையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications








