கடலில் உலவும் பேய் கப்பல்களும், திகிலூட்டும் அதன் கட்டுக்கதைகளும்... !!
விஞ்ஞானத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் கட்டுப்படாத ஆழ்கடலில் மர்மங்களும், சுவாரஸ்யங்களும் எல்லையற்று பொதிந்து கிடக்கின்றன. கரையைவிட்டு, கடலில் பயணிப்பது என்பது சவால்கள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது.
அவ்வாறு பல சவால்களையும், மர்மங்களும் நிறைந்த கடல் பயணங்கள், கப்பல்கள் பற்றிய கதைகள் இங்கு ஏராளம் இருக்கின்றன. மர்மமான முறையில் விபத்தில் சிக்கிய கப்பல்கள், மாலுமிகள் இல்லாமல் மிதந்து வரும் கப்பல்கள், கைவிடப்பட்ட கப்பல்கள் என்று இந்த பட்டியல் நீள்கிறது. அதில், உலகையே இன்றும் மிரள வைத்து வரும் சில பேய்க் கப்பல்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

10. தி கலூச்
சிலி நாட்டுக்கு அருகே கடலில் உள்ள சிலோ என்ற தீவின் அருகே, இரவு வேளைகளில் பிரகாசமான வெளிச்சத்துடன் ஒரு பேய்க்கப்பல் ஒரு சில வினாடிகள் தோன்றி மறைவதாக நம்பப்படுகிறது. அந்த கப்பலில் இருந்தவர்களின் ஆவிகள் இந்த பகுதியில் நடமாடுவதாகவும், அந்த கப்பல் தோன்றும்போது பார்ட்டி நடப்பதுபோன்று இசையும், கூத்தும், கும்மாளமும் நடப்பதுபோன்ற சப்தங்கள் வருவதாகவும் சிலோ தீவு மக்கள் கூறுகின்றனர். தி கலூச் என்ற இந்த பேய்க்கப்பல் சிலி நாட்டு மக்களிடம் பிரபலம்.

09. தி எஸ்எஸ் வாலன்சியா
1906ம் ஆண்டு வான்கூவர் அருகே மிக மோசமான வானிலை காரணமாக தி எஸ்எஸ் வாலேன்சியா கப்பல் கடலில் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்த 108 பேரில் 37 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலமாக உயிர் பிழைத்தாலும், அந்த பகுதியில் இறந்தவர்களின் ஆவியும், அந்த கப்பலும் அவ்வப்போது தோன்றி மறைவதாக நேரில் பார்த்த அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கப்பல் மூழ்கி பல தசாப்தங்கள் கடந்தாலும், அந்த பகுதி வழியாக செல்வதற்கு மீனவர்கள் அச்சப்படுவதற்கு காரணம், அங்கு மனித எலும்பு கூடுகளும், கப்பலும் தோன்றுவதுதான் காரணமாக தெரிவிக்கின்றனர்.

08. தி ஓரங் மேடன்
1947ம் ஆண்டு மலாக்கா ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களில் தி ஓரங் மேடன் என்ற கப்பலில் இருந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அந்த கப்பலிருந்து மீட்பு படையினருக்கு உதவி கோரி தகவல் கொடுத்தவர், I die என்று சொல்லியதுதான் கடைசி வார்த்தை. உடனடியாக, அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் கப்பலில் சென்று ஆய்வு செய்தபோது, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததுடன், அவர்களது முகம் மிக கோரமான முறையிலும், அச்சம் தரும் முக பாவனைகளுடன் இறந்து கிடந்தது கண்டு மீட்புக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, அந்த கப்பலில் இருந்த நாய்களும் அவ்வாறே இருந்தன. ஆனால், கைவிடப்பட்ட நிலையில் இருந்த கப்பல் வெடித்து சிதறியது. இது ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்று இன்று வரை நம்பப்படுகிறது.

07. தி கரோல் ஏ டீரிங்
பெர்முடா முக்கோணத்திற்கு அருகிலுள்ள கேப் ஹேட்டராஸ் என்ற இடமும் கப்பல் ஓட்டிகளுக்கு மிக அபாயகரமான இடமாக இருந்து வருகிறது. 1921ம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா கடல் பகுதியில் ஒரு கப்பல் பயங்கர சப்தத்துடன் தீப்பிடித்தது. இந்த விஷயம் உடனடியாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு தெரியவந்தது. உடனடியாக கப்பலில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், ஆச்சரியமளிக்கும் விதததில், கப்பலில் இருந்தவர்கள் மாயமாகியிருந்தனர். விசாணையின்போது, அதே பகுதியில் சென்ற வேறு சில கப்பல்களும் அப்போது மர்மமான முறையில் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை தந்தது. இது பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களில் சேர்த்து, கேஸை முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அமெரிக்க கடலோர காவல்படை முடிவு செய்தது.

06. தி பேஷிமோ
1911ம் ஆண்டு ஸ்வீடனில் கட்டப்பட்ட இந்த சரக்கு கப்பல் 1931ம் ஆண்டு அலாஸ்கா அருகில் கடலில் நீர் உறைந்ததால், சிக்கிக் கொண்டது. அதிலிருந்த பணியாளர்கள் கப்பலிலிருந்து இறங்கி குளிரை தாக்குப்பிடிப்பதற்காக தற்காலிகமாக கூடாரம் அடித்து தங்கினர். சில நாட்கள் கழித்து பனிக்கட்டிகள் உருகியதால், கப்பல் மிதக்கத் தொடங்கியது. பணியாளர்களும் திரும்பினர். ஆனால், அடுத்த சில நாட்களில் பனிக்கட்டியில் மீண்டும் சிக்கியது. இதையடுத்து நீர் உருகும் என்று காத்திருந்தனர். ஆனால், திடீரென அங்கு நின்றிருந்த அந்த கப்பல் மர்மமாக காணாமல் போனது. சிலர் சொன்ன தகவல்களின்படி, அந்த கப்பலை தேடி அலைந்ததுதான் மிச்சம். கப்பல் சிக்கவில்லை. ஆனால், அதிலிருந்த 1969ம் ஆண்டு வரை ஆங்காங்கே இந்த கப்பலை பார்த்ததாக பலர் தெரிவித்தனர். இதையடுத்து, கப்பலை கண்டுபிடிக்கும் குழுக்களும் முயற்சியில் ஈடுபட்டும் வீண் போனது. ஆர்டிக் கடலின் பேய்க்க்கப்பல் என்று இதனை வர்ணிக்கின்றனர்.

05. தி ஆக்டேவியஸ்
1775ம் ஆண்டு க்ரீன்லாந்து நாட்டில் இந்த கப்பல் கடலில் மிதந்து வந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.கப்பலில் இருந்த அனைவரும் ஆர்டிக் பிரதேச குளிரால் இறந்து போயுள்ளனர். கப்பல் கேப்டன் தன் இருக்கையிலேயே சமாதியாகியுள்ளார். அவரது கையில் பேனாவும், கப்பலை இயக்குவதற்கான லாக்புக்கும் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அந்த கப்பல் பிணங்களுடன் கடலில் அனாதையாக சுற்றியுள்ளது.

06. தி ஜோயிட்டா
1955ம் ஆண்டு இந்த ஆடம்பர படகு தென் பசிபிக் கடலில் கண்டறியப்பட்ட இந்த ஆடம்பர படகும் மர்மமங்களை சுமந்து நிற்கிறது. இரத்தக் கறை படித்த பேண்டேஜ் துணிகளுடன், ஆபத்தை தெரிவிக்கும் ரேடியோ சிக்னல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படகில் இருந்தவர்களின் கதி என்ன என்பது குறித்து இன்று வரை தகவல் இல்லை.

03. தி லேடி லோவிபான்ட்
இந்த கப்பலின் பின்னால் அதிர்ச்சி தரும் காதல் கதை இருக்கிறது. 1748ம் ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக, அதற்கு முந்தைய நாள் இந்த லேடி லோவிபான்ட் கப்பலின் கேப்டன் திருமண கொண்டாட்டத்தை கப்பலில் நிகழ்த்தியுள்ளார். ஆனால், கேப்டனின் மனைவி மீது காதல் கொண்டிருந்த, மற்றொரு பணியாளர் கேப்டனை கொன்றதுடன், கப்பலையும் மணல் திட்டில் மோதினார். இதில், கப்பலில் இருந்த அனைவரும் இறந்தனர். இது விஷயமல்ல. அந்த கப்பல் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதாவது, 1798, 1848, 1898, 1948 ஆகிய ஆண்டுகளில் மூழ்கிய இடத்திற்கு அருகில் கடலில் தென்பட்டிருக்கிறது. இதனை பல கப்பல் மாலுமிகள் பார்த்துள்ளனர். ஆனால், 19898ம் ஆண்டு இந்த கப்பலை பார்த்ததாக தகவல் இல்லை.

02. தி மேரி செலிஸ்டே
1872ம் ஆண்டு இந்த கப்பல் அனாதையாக கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 1500 ஆல்கஹால் பேரல்கள் துளிகூட சேதமில்லாமல் இருந்தது. கப்பலும் நல்ல கண்டிஷனில் இருந்தது. ஆனால், அதிலிருந்த பணியாளர்கள் மட்டும் காணவில்லை. அவர்களை வேற்றுக் கிரகவாசிகள் கடத்தி சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

01. தி ப்ளையிங் டச்மேன்
இந்த பேய்க்கப்பல் குறித்த பல கட்டுக்கதைகள் உள்ளன. கிழக்கிந்திய தீவுகளை நோக்கி பயணித்த இந்த கப்பல் கடும் சூறாவளியில் சிக்கி மாயமானது. அதன் பிறகு இந்த கப்பல் அவ்வழியாக செல்லும் கப்பல்களை பின்தொடர்வதாக கூறப்படுகிறது. இந்த கப்பலை பலமுறை பார்த்ததாக மீனவர்களும், கப்பல் மாலுமிகளும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் பேய் நடமாட்ட சாலைகள்!


Click it and Unblock the Notifications








