டெஸ்லா வாகனத்தை இப்போ வர சொல்லு!! இந்தியர்கள் உருவாக்கிய எலக்ட்ரிக் ஆட்டோ - நம்ம ஆளுங்க கிட்ட இவ்வளவு திறமையா!
உருவாகிவரும் டெஸ்லாவின் சைபர் டிரக்கை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் சிலர், டெஸ்லா சைபர் டிரக் போன்றதான தோற்றத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி உள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
எந்தவொரு டிசைனும் இல்லாமல், மிக எளிமையான தோற்றமே டெஸ்லா சைபர் டிரக்கின் அடையாளம் ஆகும். அதாவது, எதிர்காலத்தில் வாகனங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டால், டெஸ்லா சைபர் டிரக்கை ஒரு உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு, வேற்று கிரகத்தில் இருந்து வந்த கார் போன்று இந்த வாகனம் உள்ளது.

இப்படிப்பட்ட வாகனத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் ஓர் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஹேக்கர் டீம் என்ற குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவில், வாகனத்திற்கான சேசிஸ் மட்டும் ஒரு எலக்ட்ரிக் ஆட்டோவில் இருந்து பெறப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் டெஸ்லா சைபர் டிரக்கின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு இவர்களாகவே உருவாக்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, பல்வேறு விதமான பொருட்களில் இருந்து உலோகங்கள் எடுத்து, ஆட்டோ ரிக்ஷாவின் சேசிஸையும் இவர்கள் சற்று பெரியதாக்கி உள்ளனர். இந்த பெரியதாக்கப்பட்ட சேசிஸில் இவர்கள் உருவாக்கி இருக்கும் பாடி ஷெல் ஆனது பிரமீடு போன்று உள்ளதை செய்தியின் இறுதியில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். இந்த பாடி ஷெல்லின் மீது டிண்டு கருப்பு நிற படலத்தை ஒட்டி உள்ளனர்.

வாகனத்திற்குள் நுழைவதற்கு இந்த மொத்த செட்-அப்பையும் ஒரே நேரத்தில் தூக்க முடியும் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. உள்ளே ஆட்டோவை கண்ட்ரோல் செய்ய, வழக்கமாக ஆட்டோக்களில் இருப்பதை போல் 2 லெவர்கள் உள்ளன. இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா அதன் மெதுவாக-இயங்கும் சக்கரங்களின் திசையில் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆட்டோ ரிக்ஷாவின் உட்பக்கத்தை வெளியில் இருந்து காண முடியாவிடினும், உள்ளே இருந்து வெளியே முழுவதுமாக காண முடியுமாம். ஏனெனில், இந்த வாகனத்தின் உடற்கூடு முழுவதும் வலிமையான கண்ணாடி போன்றதான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனத்திற்குள் அமர்ந்திருந்து பார்க்கையில், 360 டிகிரிக்கு பனோராமிக் வியூ கிடைக்கும்.

இந்த வாகனத்தின் கட்டமைப்பில் உள்ள குறை என்னவென்றால், வெளி காற்று உள்ளே நுழைவதற்கு எங்கும் இடம் இல்லை. இதனால் கேபின் சீக்கிரத்தில் வெப்பம் அடைந்துவிட கூடும். மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவின் ரேஞ்ச் அல்லது சார்ஜிங் நேரம் குறித்த எந்தவொரு விபரமும் கிடைக்க பெறவில்லை. இந்த வாகனத்தில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இவ்வாறான வாகனங்களை உங்களால் பொது சாலையில் இயக்க முடியாது. ஆர்டிஓ-இல் முறையான ஆவணங்களை சமர்பித்து அனுமதி பெற்றால் மட்டுமே இயக்க முடியும். ஆர்டிஓ-இல் அனுமதியை பெற வேண்டுமெனில், வாகனம் பல்வேறு அமைப்புகளின் கீழ் சோதனை செய்யப்படும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். பொது சாலைகளில் எவரொருவருக்கும் ஆபத்து நேர்ந்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு நாமாக உருவாக்கும் வாகனங்களை ஆசைக்காக வீட்டின் வளாகத்தினுள் வேண்டுமாயின் ஓட்டி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்த வாகனம் பார்க்கும்போதே சிறிது பயங்கரமாக உள்ளது. டெஸ்லா பல்வேறு சோதனைகள் மற்றும் தர சான்றுகளுடன் அதன் சைபர் டிரக்கை உருவாக்குகிறது. அதனுடன், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை உண்மையில் எந்த விஷயத்திலும் ஒப்பிட முடியாது.


Click it and Unblock the Notifications
