140 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த கார்... சீட்டை சாய்த்து போட்டு ஜாலியாக தூங்கி கொண்டு வந்த டிரைவர்
டெஸ்லா காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு தூங்கி கொண்டு வந்த ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மின்சார வாகனங்களை தயாரிப்பதில், டெஸ்லா நிறுவனம் தலை சிறந்து விளங்குகிறது. டெஸ்லா கார்களில் வழங்கப்படும் ஆட்டோபைலட் (Autopilot) தொழில்நுட்பம், மிகச்சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கார்களின் ஸ்டியரிங், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் ஆகிய பணிகளை ஆட்டோபைலட் தானாகவே கட்டுப்படுத்தி கொள்ளும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், கார் தானாகவே இயங்கும்.

அதற்காக ஓட்டுனர்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என அர்த்தம் கிடையாது. ஓட்டுனர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்து சாலையில் கவனமாக ஒரு கண் வைத்து கொள்ள வேண்டும். டெஸ்லா நிறுவனமும் அதைதான் கூறுகிறது. ஓட்டுனர்களின் கண்காணிப்பு இல்லாமல் காரை ஆட்டோபைலட்டில் இயக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனம் எச்சரித்துள்ளது.

பொதுவாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஓட்டுனர்கள் செய்யும் தவறுகளும் காரணம். ஆனால் ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தால் காரின் ஓட்டுனர்கள் தவறு செய்வது குறைக்கப்படுகிறது. எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

ஆனால் டெஸ்லாவின் ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அதாவது காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு, கைபேசியில் திரைப்படம் பார்த்து கொண்டு வருவது போன்ற தவறான காரியங்களை செய்கின்றனர். டெஸ்லா கார் ஆட்டோபைலட்டில் இருக்கும்போது, ஓட்டுனர் கைபேசியில் திரைப்படம் பார்த்து கொண்டு வந்ததால் விபத்து நடந்த சம்பவங்களும் உண்டு.

அத்துடன் டெஸ்லா காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு ஓட்டுனர் தூங்கி கொண்டு வந்த சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன. இந்த வகையில் கனடாவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா காரை ஓட்டுனர் ஒருவர் ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு தூங்கி கொண்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் கார் வேக கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

இதன் காரணமாக அபாயகரமான முறையில் காரை இயக்கியதாக அந்த ஓட்டுனர் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் இருக்கும் போனோகா நகரில், இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மணிக்கு 140 கிலோ மீட்டர்களுக்கும் மேற்பட்ட வேகத்தில் கார் பயணம் செய்துள்ளது.

அப்போது காரின் முன் பக்கத்தில் உள்ள இரண்டு இருக்கைகளும் முற்றிலுமாக சாய்க்கப்பட்டு, ஓட்டுனர் உள்பட இருவரும் தூங்கி கொண்டு வந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நெடுஞ்சாலையின் அந்த குறிப்பிட்ட பகுதியில் கார்கள் மணிக்கு 110 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மட்டும்தான் பயணிக்க வேண்டும். இந்த வேக கட்டுப்பாட்டை கார் மீறியுள்ளது.

இது டெஸ்லா நிறுவனத்தின் கார் என்றாலும், என்ன மாடல்? என்ற தகவல் வெளியாகவில்லை. புகாருக்கு உள்ளாகியிருக்கும் ஓட்டுனருக்கு 20 வயது மட்டுமே ஆவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லா கார்களை இதுபோல் ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு, அஜாக்கிரதையாக தூங்கி கொண்டு வருவது ஆபத்தானது. ஓட்டுனர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்து சாலையில் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








