டெஸ்லா இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே காலியாகிடும் போலயே!! தொழிலாளர்கள் வேலை காலி ஆகுது!
டெஸ்லா (Tesla), உலகின் மிக பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம். இப்படிப்பட்ட டெஸ்லா நிறுவனம் தனது மென்பொருள் பணியாளர்கள் பலரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அமெரிக்க எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவை தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, பலத்த போட்டி மிகுந்த சீன நாட்டு சந்தையிலும் டெஸ்லாவின் கார்கள் சிறப்பாக விற்பனையாகுகின்றன. இதன் காரணமாகவே, அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவில் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவியது.

எலக்ட்ரிக் கார்கள் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே உலகளவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டெஸ்லாவின் கார்களும் உள்ளன. இப்படிப்பட்ட டெஸ்லா நிறுவனம் அதன் சில தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறது. எலக்ட்ரெக் என்கிற ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மென்பொருள், சர்வீஸ் மற்றும் என்ஜீனியரிங் துறைகளை சேர்ந்த குறிப்பிட்ட சில பணியாளர்கள் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வேலையை இழக்கவுள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் துறையை டெஸ்லா நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிப்பது ஆகும். அதனை தொடர்ந்து தற்போது, உலகளவில் மொத்தமாக டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 10 சதவீதத்தினர் வேலையை விட்டு நீக்கப்பட உள்ளனர்.

வேலை இழப்பு தொடர்பான இமெயில்களை சம்பந்தப்பட்ட டெஸ்லா பணியாளர்கள் பெற்றுள்ளனர். சொல்லப்போனால், இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே டெஸ்லா நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பில், எந்த பணியாளர்களை வேலையை விட்டு டெஸ்லா நீக்கவுள்ளது என்கிற விபரங்கள் இல்லை. அமெரிக்காவின் டெக்ஸஸ், கலிஃபோர்னியா, நெவாடா மற்றும் நியூயார்க்கில் பணியாற்றும் 6,700க்கும் அதிகமான பணியாளர்கள் தங்களது வேலையை இழக்கவுள்ளதாக மட்டுமே டெஸ்லா தெரிவித்து இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, கார்கள் விற்பனை குறைந்து வருவது மறுப்பக்கம் டெஸ்லா நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக மாறிவருகிறது. அதேபோன்று, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அவற்றின் வாகனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இதுவும் டெஸ்லா நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, முடிந்தவரையில் செலவீனங்களை குறைத்துவரும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், அதேநேரம் தானியங்கி டிரைவிங் சாஃப்ட்வேர், ரோபோ டாக்ஸி மற்றும் மனித ரோபோக்கள் பிராஜெக்ட்களில் பணத்தை முதலீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறார். பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அடுத்த 3 மாதங்களில் சுமார் 35 கோடி டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என டெஸ்லா நம்பிக்கை கொண்டுள்ளது.
டெஸ்லா பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதினால், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளான ட்ரூ பாக்லினோ, ரோஹன் படேல், ரெபேக்கா டினுசி மற்றும் டேனியல் ஹோ உள்ளிட்டோர் வேலையை இழக்கவுள்ளனர். இதற்கிடையில், புதிய எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுப்பட்டு வருவதாக கடந்த ஏப்ரலில் டெஸ்லா தெரிவித்து இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் அசைக்க முடியாத எலக்ட்ரிக் கார் நிறுவனமாக உருவெடுத்து வந்த டெஸ்லா நிறுவனத்திற்கு இது சிறிய சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிலையில் இருந்து டெஸ்லா மீண்டும் வரும் என நம்புவோம். ஏனெனில், இந்த பணியாளர்கள் குறைப்பானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









