எங்கயோ மச்சம் இருக்கு... அதிர்ஷ்டம் அடித்ததால் போலீஸிடம் இருந்து தப்பிய குற்றவாளி... எப்படி தெரியுமா
அதிர்ஷ்டம் அடித்ததால் போலீஸிடம் இருந்து குற்றவாளி ஒருவர் தப்பித்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வழக்கமான கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை. அத்துடன் அவை மிகவும் அமைதியானவை. ஆனால் தற்போது வரை பெட்ரோல், டீசல் கார்களுக்கு ஒரு முழுமையான மாற்றாக எலெக்ட்ரிக் கார்கள் உருவெடுக்கவில்லை.

சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்து கொள்வது, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைவான தூரம் மட்டுமே பயணிப்பது என எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் ஒரு சில குறைபாடுகளால், அவற்றை பெட்ரோல், டீசல் கார்களுக்கான ஒரு முழுமையான மாற்றாக கருத முடியவில்லை. எலெக்ட்ரிக் கார் நடுவழியில் சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் வாடிக்கையாளர்களிடம் காணப்படவே செய்கிறது.

இப்படியான ஒரு மோசமான சூழ்நிலையை போலீஸ்காரர் ஒருவர் அனுபவித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் குற்றவாளியை துரத்தி கொண்டிருக்கும் சமயத்தில். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமாண்ட் (Fremont) நகரில் இந்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

ஃப்ரீமாண்ட் காவல் துறையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சமீபத்தில், குற்றவாளி ஒருவரை துரத்தி கொண்டிருந்தார். 2014 டெஸ்லா மாடல் எஸ் 85 காரில், அந்த போலீஸ்காரர் பயணித்து கொண்டிருந்தார். இது மாடல் எஸ் ரேன்ஜில் விலை குறைவான மாடல் ஆகும். கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பத்துடன் தொடர்புடைய குற்றவாளியைதான் அவர் துரத்தி கொண்டிருந்தார்.

ஆனால் இந்த சேஸிங்கை தொடங்கிய ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, மேற்கொண்டு 6 மைல்கள் பயணிப்பதற்கான சார்ஜ் மட்டுமே தனது காரில் உள்ளது என்பது அந்த போலீஸ்காரருக்கு தெரியவந்தது. அதுவும் வழக்கமான வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம். அதிவேகத்தில் காரை ஓட்டி செல்ல முடியாது.

எனவே இது தொடர்பாக மற்ற போலீஸ்காரர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். நல்ல வேளையாக மற்ற போலீஸ்காரர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து உதவி செய்தனர். அதே சமயம் குற்றவாளியை சேஸ் செய்யும் பணியையும் அவர்கள் பார்த்து கொண்டனர். ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் இந்த சேஸிங் கைவிடப்பட்டது.

குற்றவாளி மிகவும் அபாயகரமான முறையில் காரை ஓட்டி கொண்டிருந்தார். எனவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த சேஸிங் கைவிடப்பட்டது. இதை பயன்படுத்தி கொண்டு அந்த குற்றவாளி தப்பி விட்டார். காரில் சார்ஜ் தீர்ந்த காரணத்தால், குற்றவாளியை சேஸ் செய்யும் பணியை போலீஸ்காரர் ஒருவர் கை விட்டது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.

பொதுவாக காவல் துறை பயன்படுத்தும் கார்களில், குறைந்தபட்சம் எவ்வளவு எரிபொருள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறை உள்ளது. இதன்படி ஷிப்ட் தொடங்கும்போது குறைந்தபட்சம் டேங்க்கில் பாதி அளவிற்கு எரிபொருள் இருக்க வேண்டும். இதுவே எலெக்ட்ரிக் கார்கள் என்றால், பாதி அளவிற்கு சார்ஜ் இருக்க வேண்டும்.

Image Courtesy: Fremont Police Department
இந்த விதிமுறைப்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள டெஸ்லா காரிலும் 50 சதவீத அளவிற்கு சார்ஜ் இருக்கவே செய்தது. ஆனால் சேஸிங்கின்போது சார்ஜ் தீர்ந்து விட்டது. இதற்கு முன்பாக எலெக்ட்ரிக் கார்களை திருடி கொண்டு சென்ற சமயத்தில் சார்ஜ் தீர்ந்த காரணத்தால் கொள்ளையர்கள் சிக்கி கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் காவல் துறையின் எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்த காரணத்தால் கொள்ளையன் தப்பிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் காவல் துறை எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு பாடம் என்பதில் சந்தேகமே இல்லை. எலெக்ட்ரிக் கார்களில் குறைந்தபட்சம் எவ்வளவு சார்ஜை பராமரிக்க வேண்டும்? என்பது தொடர்பான தெளிவான விதிமுறைகளை இனி அவர்கள் வகுப்பார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








