தானாக ஓடிய கார்! செல்போனில் ஹாயாக படம் பார்த்து கொண்டு வந்த டிரைவர்!! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
டெஸ்லா மாடல் எஸ் கார் ஆட்டோபைலட்டில் ஓடிய நிலையில், ஓட்டுனர் செல்போனில் திரைப்படம் பார்த்து கொண்டே வந்ததால் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விற்பனைக்கு வரும் அதிநவீன கார்கள், ஓட்டுனர்களின் வேலையை எளிதாக்கியுள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். உலகிலேயே மின்சார கார்களை தயாரிப்பதில் டெஸ்லா நிறுவனம்தான் தலைசிறந்து விளங்குகிறது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் ஆட்டோபைலட் (Autopilot) அமைப்பு, தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோபைலட் அமைப்பு காரை தானாகவே கட்டுப்படுத்தி கொள்ளும். ஓட்டுனர்கள் எதுவும் செய்ய தேவை இல்லை. பொதுவாக கார்கள் விபத்தில் சிக்குவதற்கு ஓட்டுனர்கள் செய்யும் ஒரு சில தவறுகளும் காரணம். ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் தொழில்நுட்பம் மூலம், ஓட்டுனர்களுக்கு வேலையில்லை என்பதால், விபத்துக்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனினும் இந்த தொழில்நுட்பத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்துவதால், தேவையில்லாமல் விபத்துக்கள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில் ஓட்டுனர்களுக்கு சிறு உதவிகளை செய்யும் வகையில்தான் ஆட்டோபைலட் உள்ளது. ஆனால் ஓட்டுனர்கள் இதனை தவறாக புரிந்து கொள்கின்றனர். அதாவது சாலையில் இருந்து தங்கள் கவனத்தை முழுவதுமாக எடுத்து விடுகின்றனர்.

ஆனால் கார் ஆட்டோபைலட்டில் இருந்தாலும், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் சாலையில் கவனம் செலுத்த வேண்டும். சாலையில் இருந்து முழு கவனத்தையும் ஓட்டுனர் எடுத்து விடுவதை, டெஸ்லாவோ அல்லது அரசாங்கமோ தற்போதைக்கு அனுமதிக்கவில்லை. எனவே ஆட்டோபைலட்டில் இருந்தாலும், சாலையின் மீதும் ஒரு கண் வைத்து கொள்வதுதான் நல்லது.

இது தொடர்பாக பல முறை வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், ஓட்டுனர்கள் தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டேதான் இருக்கின்றனர். ஆட்டோபைலட் தொழில்நுட்பம் இருப்பதால், ஒரு முறை டெஸ்லா காரில் ஓட்டுனர் தனது இருக்கையில் அமர்ந்து தூங்கி கொண்டே பயணித்த விபரீதங்களும் அரங்கேறின. கார் அதுவாக இயங்கி கொண்டிருந்த நிலையில், ஓட்டுனர் தூங்கி கொண்டு வந்தார்.

இணையத்தில் அந்த காணொளி தீவிரமாக பரவிய நிலையில், ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதால், தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது. அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள நாஷ் கவுண்டியில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) கார் ஒன்று, நாஷ் கவுண்டி காவல் துறை காரின் மீது மோதியுள்ளது.

சம்பவத்தன்று விபத்து ஒன்று நடைபெற்றதாக நாஷ் கவுண்டி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையின் கார் அங்கு சென்று, சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக டெஸ்லா மாடல் எஸ் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டெஸ்லா மாடல் எஸ் கார், காவல் துறை வாகனத்தின் மீது மோதியது.

இதன்பின் டெஸ்லா மாடல் எஸ் காரின் ஓட்டுனர் தேவெய்ந்தர் கோலியிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது தனது கார் ஆட்டோபைலட்டில் இருந்த நிலையில், செல்போனில் திரைப்படம் பார்த்து கொண்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுவே இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

இவர் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ராலெய் என்னும் நகரை சேர்ந்தவர். இந்த விபத்தில் சிக்கிய 2 கார்களும் பலத்த சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல். ஆட்டோபைலட் என்னும் டெஸ்லாவின் அற்புத தொழில்நுட்பத்தை தேவைப்படும் சமயங்களில், கவனமாக கையாண்டால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








