கொரோனா வைரஸால் தவிக்கும் அமெரிக்கா... கடைசியில் சீனாதான் உதவி செய்தது... வெளிவந்த உண்மை...
கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் உலக வல்லரசான அமெரிக்காவே தடுமாறி வரும் நிலையில், சீனா உதவி செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் தற்போது ஆட்டிபடைத்து வருகிறது. கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 22,049 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,88,055 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

எனவே வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை உலகின் பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் நாடியுள்ளன. வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களை அரசுகள் கேட்டு கொண்டுள்ளன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதற்கு முன்வந்துள்ளன. இதன்படி கனடாவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தி நடக்கவுள்ளது. இதற்காக அந்நிறுவனங்களுக்கு கனடா அரசு உதவி செய்யும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அத்துடன் ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன. இதில், டெஸ்லா நிறுவனமானது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆலையை, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்காக மீண்டும் திறக்கவுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் உலகம் முழுவதும் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

எனவே உலகம் முழுவதும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக, நியூயார்க் நகரில் உள்ள தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் மீண்டும் திறக்கவுள்ளது.

இதனை அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டரில் நேற்று (மார்ச் 25ம் தேதி) அறிவித்தார். முன்னதாக டெஸ்லா நிறுவனம் மருத்துவமனை வென்டிலேட்டர்களை சீனாவில் வாங்கி அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்றுதான் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவியது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகள் ஒரு சில சர்ச்சையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்த சூழலில், அமெரிக்காவிற்கும் சீனா உதவி செய்துள்ளது. சீனாவின் வுஹான் நகரம்தான் கோவிட்-19 வைரஸின் தாயகமாக கருதப்படுகிறது. வுஹான் உள்பட சீனா முழுவதும் தற்போது நிலைமை ஓரளவிற்கு மேம்பட தொடங்கியுள்ளது.

எனவே கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதில் அனுபவம் பெற்ற சீனா தற்போது உலக நாடுகளுக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளது. சீனாவை காட்டிலும் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலிக்கும் கூட சீனா உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை மறந்து உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவிட்-19 வைரஸை ஒழிக்க முடியும் என தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான முயற்சிகள் காரணமாக தற்போது வரை நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. ஆனால் இங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. எனவே இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை உடனே தொடங்கும்படி, அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உத்தரவிட்டுள்ளார். இந்த இடைக்கால உயிர்காக்கும் கருவிகளின் விலை 7,500 ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








