ஷோரூமை திறந்தது பெரிய விஷயம் இல்ல... இந்தியாவில் டெஸ்லா இதை செய்தே ஆகணும்!
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் நாடு முழுவதும் பரவலாக இல்லாதது ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுவர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்பட சில தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், பெட்ரோல் பங்குகளை போன்று ஃபாஸ்ட் சார்ஜர்கள் அனைத்து பகுதிகளிலும் வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்றே தோன்றுகிறது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நுழைந்த டெஸ்லா (Tesla) நிறுவனம் அதன் சூப்பர்சார்ஜர்களை (Supercharger) நிறுவ ஏற்கனவே துவங்கிவிட்டது.

அதன்படி, இந்தியாவில் நிறுவப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள முதல் டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையத்தின் படங்கள் 'டெஸ்லா க்ளப் இந்தியா' என்கிற எக்ஸ் பக்கத்தின் வாயிலாக இணையத்தில் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு, உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) மும்பையில் திறந்திருப்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அதேபோல், இந்தியாவில் சூப்பர்சார்ஜரையும் டெஸ்லா நிறுவனம் மும்பையில் தான் நிறுவியுள்ளது. அதுவும், டெஸ்லா ஷோரூம் அமைந்துள்ள மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (Bandra Kurla Complex) பகுதியில்தான் டெஸ்லாவின் முதல் சூப்பர்சார்ஜிங் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக நிறுவப்படாத போதிலும், இந்த டெஸ்லா சூப்பர்சார்ஜர் நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதை தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள படங்களில் காண முடிகிறது.

இந்தியாவில் இந்த முதல் சூப்பர்சார்ஜிங் நிலையத்தை டெஸ்லா நிறுவனம் தற்போது சோதனை செய்து வருவதாகவும், இதனால் இந்த பகுதிக்குள் வருவதற்கு பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்னும் சில நாட்களில் இந்த சூப்பர்சார்ஜிங் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இந்த தடை எல்லாம் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே ஆகும்.
மும்பையின் பந்த்ரா பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த டெஸ்லா சார்ஜிங் நிலையத்தில் மொத்தம் நான்கு சார்ஜர்கள் உள்ளன. அதாவது, இந்த சார்ஜிங் நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய முடியும். அமெரிக்காவில் இருப்பதை போன்று இந்த சூப்பர்சார்ஜிங் மெஷின்கள் ஒவ்வொன்றும் 250 கிலோவாட்ஸ் வரையிலான வேகத்தில் டெஸ்லா எலக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்யக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 4ஆம் தேதி திறக்கப்பட உள்ள டெஸ்லாவின் இந்த சூப்பர்சார்ஜிங் நிலையத்தில் ஒரு கிலோவாட்ஸ் சார்ஜிங்கிற்கு 24 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. விரைவான சூப்பர்சார்ஜர்கள் மட்டுமின்றி, குறைந்த கட்டணத்தில், குறைவான வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய மாறுதிசை மின்னோட்ட (AC) சார்ஜர்களும் டெஸ்லாவின் இந்த சூப்பர்சார்ஜிங் நிலையத்தில் இடம்பெற உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் ஷோரூம் திறக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையிலேயே சார்ஜிங் ஸ்டேஷனை (Charging Station) நிறுவுவதுதான் சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், அப்போதுதான் டெஸ்லா டீலர்ஷிப் ஷோரூமை சுற்றியுள்ள மக்கள் நம்பிக்கையோடு டெஸ்லா கார்களை வாங்க முன்வருவர். உலகம் முழுவதும் பல நாடுகளில் நெட்வொர்க்கை கொண்டுள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு இதையெல்லாம் சொல்லியா தர வேண்டும்...?


Click it and Unblock the Notifications









