பந்தய வீரராக மாறும் அஜித்: வாழ்க்கை வரலாற்று கதையா...? அடுத்த படம்பற்றிய சிறப்பு தகவல் கசிவு!!!
அஜித் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்குறித்த தகவல் கசிந்துள்ளது. இப்படம், அஜித்திற்கு மிகவும் பிடித்தமான ஓர் துறையை கருவாகக் கொண்டு இயக்கப்பட இருப்பதாக ஓர் பிரபலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தல அஜித்தின் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரலாறு காணாத அளவில் வெற்றி நடைப் போட்டிக் கொண்டிருக்கின்றது. இப்படம் இந்தியில் வெளியாகிய பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதனை, எச். வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், பாலிவுட் திரைப்பட நடிகர் வித்யாபாலன், ஸர்தா ஸ்ரீகாந்த், அபிராமி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தகுந்தது.

தல என்று பாசத்துடன் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் கடந்த காலங்கள் மிகவும் மோசமானதாக இருந்தாலும், அவர் தற்போது பல கோடி மக்களின் மனதை கொள்ளைக்கொண்ட நடிகராக இருக்கின்றனர்.

இவர், பைக் ரேஸில் கலந்துகொள்வதற்காகவே நடிக்க வந்ததாகக் கூறப்படுகின்றது. இதில், கிடைக்கும் பணத்தை வைத்து, அவரின் ரேஸர் கனவை நிறைவேற்றிக் கொள்ள எண்ணினார். இதற்காக, சினிமாத் துறையை நாடிய அவருக்கோ ஆரம்பத்தில் அவமானங்களே மிஞ்சியது.

இருப்பினும், விடா முயற்சியுடன் பணத்தைச் சேர்த்த அஜித், கிடைத்த பணத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார். அவ்வாறு, அவர் கலந்துக் கொண்ட பந்தயத்தில் மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தார். அதில், படுகாயமடைந்த அவர், உடல் தேறி நலம் திரும்பினார்.
பின்னர், ரேஸ் ஆசையை விட்டுவிட்டு நடிப்பதையை முழுநேர பணியாக மேற்கொள்ள எண்ணி, ஆசை படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக களமிறங்கினார்.

அஜித் நடித்த படங்கள் ஆரம்பத்திலேயே வெற்றக் கனியை சூடிவிடவில்லை. ஆரம்பத்தில் அவரின் பல படங்கள் தோல்வியையே சந்தித்தன. இருப்பினும், மனம் தளராத அஜித், தொடர்ந்து நடிப்பு திறனை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால், பலர் இவருக்கு வசனமே வராது என நக்கலடிக்க ஆரம்பித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான், இரட்டை வேட திரைப்படமான வாலியில் நடித்து, வீண் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், இப்படத்தின்மூலம் பலரின் மனதையும் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. இருப்பினும், அஜித்தின் ஆசையான, ரேஸிங் கனவு வெற்றிப் பெறாமல் நிறைவேறாத ஆசையாக மாறிவிட்டது.

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் எச். வினோத் உடன் அஜித் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு மிக முக்கியமான கதாபாத்திரம் வழங்க இருப்பதாக போனிகபூர் கூறியுள்ளார்.
அந்தவகையில், நடிகர் அஜித் நடிக்க உள்ள இப்படம், பைக் மற்றும் கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "அஜித் நடிக்க உள்ள புதிய படம் முழுமையான அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்நத படமாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலும் இப்படம் அமையும். படத்தில், பைக் மற்றும் கார் பந்தயங்களின் சாகச காட்சிகள் அதிகம் இடம்பெறும். குறிப்பாக பைக் பந்தயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது" என்றார்.

அஜித் நடிக்க உள்ள இந்த புதிய திரைப்படம், தற்போது தமிழில் மட்டுமே உருவாக இருப்பதாகவும். இந்தியில் வெளியிடுவது குறித்து பின்னர் யோசிக்க இருப்பதாகவும் போனிகபூர் கூறியுள்ளார். முக்கியமாக இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அஜித்தின் நிறைவேறாத ஆசையாக மாறிய ரேஸர் கனவு, இப்படத்தின் மூலம் கணிசமாக நிறைவேற இருக்கின்றது. அதேசமயம், பைக் ரேஸர் கதாபாத்திரம் என்றால், அவரின் வாழ்க்கை வரலாற்றை குறித்து எடுக்கப்படுகிறதா... என்ற கேள்வி அவரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும், இப்படம் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளிவராத காரணத்தால், அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றது.

சமீபகாலமாக வெளிவரும் அஜித்தின் படங்களில் குறைந்தது ஒரு முறையாவது பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்றிவிடுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... ஆனால், படமே பைக் ரேஸை முன்வைத்து உருவாக்கப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகையால், அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

அதேசமயம், சாதாரணமாக அஜித் படத்தில் இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் மிகவும் திரில் நிறைந்ததாக இருக்கும். ஆகையால், பைக் ரேஸை மையமாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்தில் அதிக திரில்லான ரேஸ் காட்சிகளுக்கு குறைவு இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு, நல்ல விருந்து இருக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








