துருப்பிடித்த காரை விற்பனை செய்த டீலர்: ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்...
ஹரியானா மாநிலத்தில் துருப்பிடித்த பாகங்களுடன் காரை விற்பனை செய்ததுக்கு, அதன் டீலருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் வாகனமும் சேர்ந்து விட்டது என்றே கூறலாம். ஏனென்றால், தற்போது உள்ள சூழ்நிலையில் பொது வாகனங்களை நம்பி எதற்கும் செல்ல முடியாத சூழல்தான் தற்போது நிலவி வருகிறது. அதற்கு காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை தான்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள நீண்டதூரம் பயணம் செய்து வருமானத்தை ஈட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு சிலர் தங்களது தேவைக்கேற்ப வாகனங்களை வாங்கிக்கொள்கின்றனர். அதன்படி, ஒரு சிலர் புத்தம் புதிய மாடல்களையும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு தரப்பினர் வசதிக்கேற்ப பயன்படுத்திய வாகனங்களையும் வாங்கிக்கொள்கின்றனர்.

அவ்வாறு உபயோகப்படுத்திய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் வாகனம் பயன்பாட்டில் தான் உள்ளதா? அது நல்லமுறையில் செயல்படுகிறதா? என்றெல்லாம் சோதனைப்படுத்தி பார்க்க வேண்டும். அல்லது நமக்கு தெரிந்த பரீட்சையமான மெக்கானிக்கினை அழைத்துச் சென்று காரை பரிசோதித்து வாங்க வேண்டும்.

இல்லையெனில், காரை விற்கும் அதன் உரிமையாளர் (அ) டீலர்கள் கண்டிப்பாக உங்களை ஏமாற்றிவிடுவார்கள். இதுபோன்ற சம்பவம் தான் ஹரியான மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம் நாசிக்கைச் சார்ந்தவர் ராஷ்மி கலாகே, இவர் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி ரிஷப் ஹோண்டா என்ற டீலரிடம் இருந்து கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு அவர் ரூ. 9.14 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், காரை வாங்கிய சில நாள் கழித்து அதன் உள்புறமாக ராஷ்மி சுத்தம் செய்துள்ளார். அப்போது பின்புற சீட்டின் அடிப்பகுதியில் துருப்பிடித்திருந்தது. இதையறிந்த ராஷ்மி இதுகுறித்து கார் டீலரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், ராஷ்மியின் புகாருக்கு கார் ஷோரூம் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதனை சீரமைத்தும் கொடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ராஷ்மி அவரது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு அந்த காரில் புறப்பட்டுள்ளார். அவ்வாறு அவர் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென காரின் சக்கரம் பஞ்சர் ஆகியது. இதையடுத்து, நீண்ட சிரமத்துக்கு பிறகு பஞ்சரை கடையை ராஷ்மி அடைந்துள்ளார்.

அப்போது, வீலின் உள்பகுதியிலும் துருப்பிடித்து இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து ராஷ்மி இதுகுறித்து மீண்டும் டீலரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவருடைய புகார்களுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ராஷ்மி, நாசிக் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுகுறித்த விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அதன்மீதான தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அதில், ராஷ்மியை நீண்ட நாள் அலைகழித்ததற்கும், வாடிக்கையாளர்களின் தேவையை முழுமையாக சீரமைக்காத குற்றத்துக்காவும். 50 ஆயிரம் ரூபாய் ராஷ்மிக்கு வழங்கவேண்டும் என கார் டீலருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், சீரற்று இருக்கும் காரை மீண்டும் சரிசெய்து அவருக்கு அளிக்க வேண்டும் எனவும் நாசிக் நுகர்வோர் நீதிமன்றம் தீர்பளித்தது.


Click it and Unblock the Notifications








