காட்டு வழி போறோம்... கவலைப்படாத..... ஆஃப் - ரோடிங் ஜீப்கள் அறிமுகமான கதை...
ஆஃப் ரோடிங்..... அட்வென்ட்சரஸ் கார் டிரைவிங் பிரியர்கள் காதலிக்கும் வார்த்தை அது. நெடுஞ்சாலைகளிலும், பளபளப்பான தார் ரோடுகளிலும் விசிலடித்துக் கொண்டே சொகுசுப் பயணம் மேற்கொள்வது பெரும்பாலானோரது விருப்பமான செயல்.
அதையே கொஞ்சம் மாற்றி கல்லிலும், முள்ளிலும், கரடு-முரடான பாதையிலும், பாறைகளிலும், மண் சரிவிலும் வண்டி ஓட்டினால் எப்படி இருக்கும்? அட போங்க பாஸ்... ஹெவி டிராஃபிக்ல ஆஃபிஸ் போய்ட்டு வரதுக்குள்ளேயே முதுகு வலி வந்துடுது... இதுல கல்லுலயும், முள்ளுலயும், எங்க போய் ஓட்டறது? என நினைப்பவர்களா நீங்கள்...

அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது அல்ல. இது முழுக்க த்ரில்லான அனுபவத்தை விரும்பும் ஆஃப் - ரோட் ரைடர்களுக்கானது. சமதளப் பரப்பில்லாத, சாலைகள் இல்லாத கரடான பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு பெயர் ஆஃப் - ரோடிங்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, இத்தகைய சாலைகளில் செல்வதற்காக திறனுடைய வாகனங்கள் வேண்டும் என்றும் அமெரிக்க ராணுவம் கேட்டிருந்தது.
வில்லீஸ்-ஓவர்லேண்ட் போன்ற கம்பெனிகள் அதுபோன்ற ஆஃப்-ரோட் வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன. அதுதான் வில்லீஸ் எம்பி என உருவானது. அதாவது ஜீப். அந்த வாகனம் ஹல்க் ரேஞ்சுக்கு எதையும் தாங்கும் இதயமாக உலா வந்ததால், ராணுவத்தினர் பெரும்பாலும் பயன்படுத்தும் ஜீப்பாக வில்லீஸ் எம்பி மாறிப்போனது.
சுமார் ஆறரை லட்சம் வாகனங்களை ராணுவப் பயன்பாட்டுக்காக வில்லீஸ் தயாரி்த்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் வில்லீஸ் ஜீப்பைத் தயாரிக்கும் உரிமையை மகேந்திரா நிறுவனம் வாங்கியதால், 1948-க்குப் பிறகு நம் நாட்டிலும் அந்த மாடல் வண்டிகள் தயாரிக்கப்பட்டன.
அதன் பிறகு மகேந்திரா எம்எம் 540 மாடல் ஜீப் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு ஆஃப் - ரோடிங் வாகனங்களைத் தயாரிக்க பல நிறவனங்கள் சந்தையில் கால் பதிக்கத் தொடங்கின.

இதன் காரணமாக காலத்துக்கேற்ப மாற வேண்டிய கட்டாயம் மகேந்திரா நிறுவனத்துக்கும் எழுந்தது. அதைக் கருத்தில் கொண்டு, சாலையிலும், கரடு முரடான பாதையிலும் பயணிக்க வல்ல புது மாடல் ஜீப்பை அறிமுகப்படுத்துவதாக மகேந்திரா நிறுவனம் அறி்வித்தது.
அதன்படியே, தார் என்ற பெயரில் கடந்த 2010-ஆம் ஆண்டு அந்த மாடல் சந்தைக்கு வந்தது. கிட்டத்தட்ட எம்எம் 540 மாடலைப் போலவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் முதலில் அதிருப்தி தெரிவித்தனர்.

பிறகு மெல்ல, மெல்ல அந்த மாடல் ஹிட்டடிக்கத் தொடங்கியது. ஆஃப் - ரோட் டிரைவிங் ஆர்வலர்கள் அதன் செயல்பாட்டில் மயங்கி, மகேந்திரா தாரைக் கொண்டாடத் தொடங்கினர்.
வடிவமைப்பு, செயல்திறன், டயர்கள், சஸ்பென்சன் என அனைத்தும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததே அதற்குக் காரணம்.

2.5 லிட்டர் டிஐ எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் சிஆர்டிஇ எஞ்சின் என இரு மாடல்களில் தார் அறிமுகமானது. டிஐ எஞ்சினானது 63 பிஎச்பி திறனையும், சிஆர்டிஇ எஞ்சின் 104 பிஎச்பி திறனையும் கொண்டது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரு மாடல்களிலும் மகேந்திரா தார் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பம்பர், வடிவமைப்புகளில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றம் செய்யப்பட்ட தார் மாடல் மார்க்கெட்டுக்கு வந்தது. அது இளைஞர்கள் மத்தியில் தாறு மாறாக ஹிட்டானது. ஆஃப் - ரோட் ஆர்வலர்களின் வரப்பிரசாதமாகவே தற்போது மகேந்திரா தார் மாறிவிட்டது எனலாம்.


Click it and Unblock the Notifications









