சாலை நடுவில் சாவகாசமாக சைக்கிள் பவனி... மீண்டும் சர்ச்சைக்குள்ளான சல்மான்...
பிரிக்க முடியாதது என்னவோ? என்று திருவிளையாடல் பட தருமி மாதிரி கேட்டால், இப்போதைய சூழலில் பெரும்பாலானோர் சொல்லும் பதில் சல்மானும்... சர்ச்சையும்... என்பதாகத்தான் இருக்கும்.
அந்த அளவுக்கு நம்ம ஹீரோ ஊர் வம்புகளை இழுத்து விடுவதில் கில்லாடி. நடைபாதையில் தூங்கியவர்கள் மேல் கார் ஏற்றிய வழக்கில் இன்னும் உண்மையான விடை தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமன்றி மான் வேட்டை வேறு தனியாக அவர் ஆடுவார். இதோடு விடுவாரா சல்மான்... சுல்தான் பட சூட்டிங் எப்படி சார் இருந்தது? எனக் கேட்டால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளோடு ஒப்பிட்டுப் பேசி ஒட்டு மொத்த சமூகத்தையும் கடுப்பேத்துவார்.
இப்படியாக, பாரபட்சமின்றி அனைவருக்கும் டென்ஷன் ஏத்துவதே எனது கடமை என வாழ்ந்து வரும் சல்மான் கான், வழக்கம்போல மற்றொரு சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார்.
மும்பை நகரமே பரபரப்பாக இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு போல காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஊரின் நெரிசலான சாலையில், தனது பரிவாரங்கள் புடை சூழ சைக்கிளில் சாவகாசமாகப் பயணம் செய்துள்ளார் சல்மான்.
இதிலென்ன இருக்கிறது? ஒரு நட்சத்திரத்துக்கு சைக்கிள் ஓட்டக்கூட உரிமை இல்லையா? என்று கேட்கலாம். நிச்சயமாக இருக்கிறது. அதற்காக அலுவலகத்துக்கு மக்கள் அடித்துப் பிடித்துக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் பிஸியான நேரத்தில், பிரபலமாக இருக்கும் ஒருவர், ஹாயாக சைக்கிளில் போய் டிராஃபிக் ஜாம் ஏற்படுத்துவது சரியல்லவே.
பொதுவாக சினிமா நட்சத்திரம் ஒருவர் பொதுவெளியில் வந்தால், அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இந்த நிலையில், இப்படி ஒரு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டால் மக்களுக்கு அது அசௌகரியத்தைத்தான் ஏற்படுத்தும். சல்மானின் இந்த நடவடிக்கையை ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சல்மான் ஓட்டி வரும் சைக்கிளுக்குப் பின்னால், அவரது பாதுகாவலர்கள் பைக்கில் வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது பாதுகாப்புக்கு முன்னும், பின்னும் கார்கள் செல்கின்றன.
நடுவில் சல்மான் சாவகாசமாக சைக்கிள் ஓட்டுகிறார். மக்களால் வளர்ந்த ஒரு கலைஞன், அவர்களைத் தெய்வமாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை... தனது உயர்வுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு இடையூறு கொடுக்காமலாவது இருக்கலாமே... இனிமேலாவது புரிந்து நடப்பாரா சல்மான்?


Click it and Unblock the Notifications








