டேங்கர் லாரியில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் கொள்ளை... எப்படி நடந்துச்சுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
டேங்கர் லாரியில் இருந்து 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் பெட்ரோல், டீசல் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள்தான் இதற்கு காரணம். இதனை கிண்டலடிக்கும் விதமாக திருமண மேடைகளில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசலை பரிசாக வழங்கும் வினோத சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவதுண்டு.

இந்த நிகழ்வுகள் தலைப்பு செய்திகளாக மாறும். அதேபோல் விலை உயரும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் திருட்டு தொடர்பான செய்திகளும் அதிக கவனம் பெறும். இந்தியாவை போல் இங்கிலாந்திலும் தற்போது எரிபொருள் திருட்டு சம்பந்தமான செய்தி ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. இந்த செய்தி கடல் கடந்து உலகின் பல்வேறு நாடுகளையும் சென்றடைந்துள்ளது.

மிகவும் வினோதமான முறையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதுதான் இதற்கு காரணம். இங்கிலாந்தில் தற்போது எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளுக்கு போதுமான அளவில் டிரைவர்கள் இல்லாததுதான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

டிரைவர்கள் இல்லாததால் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் முன்பு தற்போது மிகவும் நீண்ட வரிசையை பார்க்க முடிகிறது. அத்துடன் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம், சண்டை என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான் இங்கிலாந்தில் வினோதமான எரிபொருள் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் என்ற நகரில் லாரிகளை நிறுத்தி வைக்கும் இடம் ஒன்று இருக்கிறது. இங்கு லாரிகளை சர்வீஸ் செய்து கொள்ளலாம். எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். லாரி டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் இந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இங்கு எரிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டேங்கர் லாரிதான் கொள்ளையர்களுக்கு இரையாகியுள்ளது. கொள்ளையர்கள் டேங்கர் லாரியின் மீறு ஏறி, அதில் இருந்த எரிபொருளை பைப் மூலம் கொள்ளையடித்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்ட எரிபொருள் அளவு மிகவும் பெரியது.

சம்பந்தப்பட்ட டேங்கர் லாரி 43 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த டேங்கர் லாரி கடைசியில் வெறும் 13 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன்தான் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடைந்துள்ளது. அதாவது சுமார் 30 ஆயிரம் லிட்டர் எரிபொருளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இங்கிலாந்தில் கொள்ளையடிக்கப்பட்ட எரிபொருளின் இந்திய மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான மதிப்புடைய எரிபொருள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

டிரைவர்கள் பற்றாக்குறையால் எரிபொருள் கிடைக்காததே இதற்கு காரணம். எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்பவர்கள், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னையில் இருந்து தப்பி விட்டனர். ஆனால் ஐசி இன்ஜின் வாகனங்களை வைத்திருப்பவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்தியாவிலும் ஐசி இன்ஜினில் இயங்க கூடிய வாகனங்களை வைத்திருப்பவர்களின் நிலைமை பரிதாபமாகதான் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் மிக அதிகப்படியான விலைதான் இதற்கு காரணம். எனவே இங்கிலாந்தை போல், இந்திய மக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக வரும் காலங்களில் இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications