ஹூண்டாய் கம்பெனி காரனே தோத்துருவான் போங்க... மிரள வைக்கும் டெல்லி கார் திருட்டு - வீடியோ!!
டெல்லியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் க்ரெட்டா காரை திருடர்கள் சில நிமிடங்களில் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

கார் திருட்டு ஆனது உலகம் முழுவதிலும் போலீஸாரின் பெரும் பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது. அதிலிலும் குறிப்பாக நமது இந்தியாவில் கார் திருடர்களின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை குறைக்க, போலீஸார் புதிய புதிய தொழிற்நுட்பங்களை தங்களது விசாரணையில் பயன்பாட்டிற்கு கொண்டுவருகின்றனர்.

ஆனால் இதற்கேற்ப திருடர்களும் போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தங்களை புதிய தொழிற்நுட்பங்கள் மற்றும் தந்திரங்கள் மூலமாக அப்டேட் செய்து கொள்கின்றனர். இதனாலேயே ஒருபக்கம் தீவிர விசாரணையின் மூலம் கார் திருடர்களை போலீஸார் பிடித்துவந்தாலும், மறுபக்கம் கார் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.

குறிப்பாக, தேசிய தலைநகர் டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஏறக்குறைய 95 வாகனங்கள் திருடப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதில் ஒரு சிலர் எப்போதும் போலீஸாரிடம் சிக்குவதே இல்லை. அத்தகைய திருடர்கள் தான் சமீபத்தில் டெல்லியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரை மிகவும் இலாவகமாக திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை மேலே காணலாம். டெல்லியின் நிஸாமுதீன் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த வீட்டிற்கு முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-இல் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில், திருடப்பட்டுள்ள க்ரெட்டா கார் ஆனது முந்தைய தலைமுறை மாடலாகும்.

இந்த காரினை திருட திருடர்கள் மற்றொரு க்ரெட்டா காரில் வந்துள்ளனர். அதுவும் முந்தைய தலைமுறை மாடலே ஆகும். அதேபோல் இவை இரண்டும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் உள்ளன. திருட உள்ள க்ரெட்டா காருக்கு அருகாமையில் தங்களது க்ரெட்டா காரை நிறுத்திய திருடர்கள் உடனடியாக தங்களது காரில் இருந்து வெளிவராமல், உள்ளிருந்தப்படியே சுற்றிலும் நோட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், சுற்றிலும் எங்கெங்கு சிசிடிவி கேமிராக்கள் உள்ளன என்பதையும் காரில் இருந்தப்படியே தெரிந்துக் கொண்டுள்ளனர். இதனால்தான் சில வினாடிகள் கழித்து காருக்குள் இருந்து திருடன் ஒருவன் வெளியே வந்தாலும், சிசிடிவி-இல் தனது முகம் பதியாதப்படி, வெளியே வந்த உடனே குனிந்து கொண்டு, தனது காரின் கதவை மூடியும், திருடவுள்ள காரின் ஓட்டுனர் இருக்கை பக்க கதவை திறந்தும் உள்ளே சென்றுள்ளான்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, முன்னதாக தனது காரில் இருந்தப்படியே திருட வேண்டிய காரை ஹேக் செய்துள்ளான். இதனால்தான், அவனால் உடனடியாக காரின் கதவை திறந்து உள்ளே சென்று, அடுத்த சில வினாடிகளிலேயே காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து எடுத்து செல்ல முடிந்துள்ளது. பூட்டை உடைப்பது, காரின் கதவை பிடித்து இழுப்பது, உள்ளே சென்றப்பின் காரை ஸ்டார்ட் செய்ய வயர்களை பிடித்து கடித்து கொண்டிருப்பது என எந்தவொரு இரைச்சலுக்கான வாய்ப்பும் இந்த சம்பவத்தில் ஏற்பட்டதுப்போல் தெரியவில்லை.

இதில் இருந்து இந்த திருடர்கள் தொழிற்நுட்பங்களை கையாளுவதில் எந்த அளவிற்கு திறனுடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியலாம். முந்தைய காலங்களில் ஒரு காரை திருட வேண்டுமென்றால், அந்த காரினை ஒருமுறையாவது ஓட்டி பார்த்திருக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் தற்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சியினால், எந்தவொரு காரையும் தங்களால் திருட முடியும் என்கிற நிலைக்கு திருடர்கள் சென்றுள்ளனர்.

இதற்கு டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வே சிறந்த எடுத்துக்காட்டாகும். ஹூண்டாய் க்ரெட்டா போன்ற தற்போதைய மாடர்ன் கார்களில் சாவியில்லா நுழைவு, என்ஜின் ஸ்டார்ட்டிற்கு அழுத்து-பொத்தான் என சவுகரியமான பயணத்திற்காக ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில், இவ்வாறான சவுகரிய வசதிகளே தொழிற்நுட்பங்களில் சிறந்த அறிவாற்றலை கொண்ட திருடர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றன.

ஆனால் இந்த சம்பவத்தில், உரிமையாளர் தனது காரை வீட்டின் மதுசுவற்றிற்குள் நிறுத்தியிருந்தால், பிரச்சனை இருந்திருக்காது. க்ரெட்டா போன்ற ஒரு காரை நிறுத்தும் அளவிற்கு அவரது வீட்டில் இடவசதி உள்ளதை வீடியோவில் காணலாம். கார் உரிமையாளர்கள் இவ்வாறு வீட்டின் காம்பௌண்ட் சுவற்றிற்கு உள்ளே இடவசதி இருந்தும் அலட்சியமாக வெளியே நிறுத்துவது, திருடர்களுக்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுப்போல் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications