ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நள்ளிரவில் நடந்த திகில் சம்பவம்... கார் டேஷ்போர்டு கேமராவில் பதிவான ஷாக் வீடியோ
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நள்ளிரவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள் பாதுகாப்பு இல்லாதவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இரவு நேரங்களில் இத்தகைய சாலைகளில் பயணம் செய்வது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். லாரிகள், கார்கள் மற்றும் இதர வாகனங்களை குறிவைத்து கொள்ளையடிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையர்கள் காத்திருக்க கூடும்.

இதை நிரூபிக்கும் வகையிலான திகில் சம்பவம் ஒன்று ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. காரின் டேஷ்போர்டு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளி பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. காரின் ஓட்டுனர் மட்டும் சமயோசிதமாக செயல்பட்டிருக்காவிட்டால், கொள்ளையர்கள் காரையோ அல்லது காரில் இருந்து வேறு ஏதேனும் ஒன்றையோ திருடி சென்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

பெரிதாக ஆள் நடமாட்டமும், வெளிச்சமும் இல்லாத ஒரு சாலையில் கார் பயணிப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிலர் கும்பலாக நின்று கொண்டு பிரகாசமான டார்ச் லைட் வெளிச்சத்தை காரின் ஓட்டுனர் மீது பாய்ச்சுவதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது.

காரின் ஓட்டுனரோ முதலில் அவர்களை காவல் துறையினர் என நினைத்து கொண்டு காரை நிறுத்தி விட்டார். ஆனால் அவர்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும், நல்ல நோக்கத்திற்காக அவர்கள் காரை நிறுத்தவில்லை என்பதையும் உணர்ந்த உடனே காரின் ஓட்டுனர் உடனடியாக ரிவர்ஸ் கியரை போட்டு காரை பின் பக்கமாக ஓட்டி சென்றார்.

எனினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், காரை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் அதனை துரத்தினர். அத்துடன் ஒரு சில பொருட்களை வீசி காரை சேதப்படுத்தவும் அவர்கள் முயன்றனர். இதன் மூலமாக காரின் ஓட்டுனர் தப்புவதை தடுக்க அவர்கள் முயற்சித்தனர். எனினும் காரின் ஓட்டுனர் சமயோசிதமாக செயல்பட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.

அவர் ரிவர்ஸ் கியரில் நீண்ட தூரம் வந்ததை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இது குறுகிய காணொளி என்பதால், அதன்பின் என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த சாலையில் பெரிதாக வேறு எந்த வாகனத்தையும் காண முடியவில்லை. இதன் காரணமாகதான் அந்த கும்பல், இந்த சாலையை தேர்வு செய்து கொள்ளை முயற்சியை அரங்கேற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதா? என்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் கார் ஓட்டுனரிடம் காணொளி ஆதாரமாக இருப்பதால், அவர் காவல் துறையில் புகார் அளித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த விஷயம் உறுதியாக தெரியவில்லை.

இந்தியாவில் காரையோ அல்லது காரில் இருந்து பொருட்களையோ திருடுவதற்கு கொள்ளையர்கள் முயற்சி செய்வது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிறைய முறை நடைபெற்றுள்ளன. பணத்தை சிதற விட்டோ அல்லது ஆயில் கசிகிறது என்ற பொய்களை கூறியோ ஒரு சில கொள்ளையர்கள் தனியாக இருக்கும் ஓட்டுனரை காரில் இருந்து வெளியே வர வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அவர் வெளியே வந்ததும் லேப்டாப்கள் அல்லது பணம் ஆகியவை இருக்கும் பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விடுகின்றனர். இதுபோல் ஏராளமான தந்திரங்களை கொள்ளையர்கள் பின்பற்றுகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருப்பது அவசியம். முடிந்தவரை நல்ல வெளிச்சம் இருக்கும் நேரங்களில் பயணம் செய்வது நல்லது. இரவில் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்பட்சத்தில், வழித்தடம் நன்றாக தெரிந்திருந்தால் மட்டும் பயணம் செய்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications








