அப்பளமான ஆல்ட்டோ கார்... 4 உயிர்களை பலிவாங்கிய அதிகாலை பயணம்... !!
அதிகாலை நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் இருக்கும் விபத்து ஆபத்தை மும்பை அருகே நடந்த கார் விபத்து உணர்த்துவதாக இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நள்ளிரவு மற்றும் அதிகாலை நேர பயணத்தை தவிர்ப்பது உத்தமம் என்று பல முறை நாம் செய்தி வெளியிட்டு இருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளையும் அவ்வப்போது எழுதி வருகிறோம்.

இந்த சூழலில், மும்பை அருகே டிரக்குடன் ஆல்ட்டோ கார் மோதி நடந்த விபத்து அதிகாலை நேரத்தில் கார் பயணம் மேற்கொள்வதன் ஆபத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Recommended Video


மும்பையை சேர்ந்தவர் யஷ்வந்த் பாண்டுரங் மனே[45]. இவர் மும்பை சுனாபட்டி என்ற இடத்தில் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வருவதுடன், அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சதாரா அருகில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு தனது ஆல்ட்டோ காரில் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். பின்னர், மயானி என்ற இடத்தில் உள்ள மருத்துவ கல்வி நிலையத்தில் பயிலும் தனது மகளை விட்டு விட்டு மும்பை திரும்பியிருக்கிறார்.

தனது மனைவி சாராதா[40], மகன் ரிஷிகேஷ்[19] மற்றும் ஓட்டுனர் ராமசந்திர கிருஷ்ணா ஆகியோர் அந்த ஆல்ட்டோ காரில் மும்பை நோக்கி பயணித்தனர். அவர்களது கார் நேற்று அதிகாலை 4 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை எண் 40ல் கத்ராஜ் சுரங்கப்பாதை பகுதியில் வரும்போது கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற டிரக்குடன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அந்த ஆல்ட்டோ கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். சப்தத்தை கேட்டு டிரக் டிரைவர் நிறுத்தி பார்க்கையில் பின்னால் கார் நொறுங்கி கிடந்துள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து போலீசார் இடிபாடுகளில் சிக்கி கிடந்த உடல்களை மீட்டனர். கார் ஓட்டுனருக்கு ஓய்வு கொடுப்பதற்காக பாண்டுரங் மனேயின் மகன் ரிஷிகேஷ் காரை ஓட்டி வந்துள்ளார். அதிவேகத்தில் வந்ததால், முன்னால் சென்ற டிரக்கை பார்த்து உடனடியாக அவரால் காரை கட்டுப்படுத்த முடியாமல் மோதியிருக்கலாம் என போலீசார் கூறி இருக்கின்றனர்.

மேலும், காரை ஓட்டிய ரிஷிகேஷ் கண் அயர்ந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

இரவு நேரங்களில் டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பின்புறத்தில் டேஞ்சர் லைட் இல்லாமலேயே இயக்கப்படுகிறது. இருள் நேரங்களில் அருகில் செல்லும்போதே அவற்றை கவனித்து செல்ல வேண்டியிருக்கும். இரவு நேரங்களில் மிக நிதானமாகவும், சீரான வேகத்திலும் செல்வதே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும்.

நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை பல ஓட்டுனர்கள் அயர்ந்து போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கார் ஓட்டுபவர் புத்துணர்ச்சியுடன் ஓட்டினாலும், எதிரில் வரும் வாகன ஓட்டி அயர்ந்து போனாலும் விபத்தை தவிர்க்க முடியாது. எனவே, இந்த சமயத்தில் கார் பயணங்களை அறவே தவிர்ப்பதும் இதுபோன்ற விபத்துக்களிலிருந்து தப்புவதற்கு உதவும்.

மேலும், வீட்டிலிருந்து அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு புறப்படுவதை தவிர்த்து, 5 மணிக்கு மேல் பயணத்தை துவங்குவதும் சிறப்பானதாக இருக்கும். இவற்றை கடைபிடித்தால், நிச்சயம் இருள் வேளைகளில் விபத்து ஆபத்தை தவிர்க்க வாய்ப்புண்டு.


Click it and Unblock the Notifications