வருகிறது பெட்ரோல் கார்களுக்கு தடை... பயப்படாதீங்க, இந்தியாவில் இல்லை!! எங்கு தெரியுமா?
உலகிலேயே முதல் அரசாங்கமாக, பெட்ரோல் & டீசல் கார்கள் விற்பனை ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தடை செய்யப்பட உள்ளது.
எந்த நாடு அது? எதற்காக இந்த தடை என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் படிப்படியாக உலகம் வெப்பமயமாதலை நோக்கி நகர்ந்து வருவதாக அவ்வப்போது சமூக ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்த வண்ணம் உள்ளனர். இதற்கு பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் தங்களது நடவடிக்கைகளை பல்வேறு துறைகளில் துரிதமாக மேற்கொள்ள கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எரிபொருள் என்ஜின் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. ஆட்டோமொபைல் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு அளவு பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடுமையாக குறைக்கப்பட்டுவிட்டன.

நம் இந்தியாவிலும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் 2020இல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். என்றாலும், முற்றிலுமாக காற்று மாசை வெளிப்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களே இதற்கு ஒரே தீர்வு என அதனை நோக்கி பயணிக்க பல நாடுகளில் அரசாங்கங்கள் துவங்கிவிட்டன. நம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளையும் அறிவித்தப்படி உள்ளது.

ஆனால் அமெரிக்காவில், இந்த விஷயத்தில் ஒரு படி மேல் சென்று, கலிஃபோர்னியா மாகாண அரசாங்கம் பெட்ரோல் & டீசல் கார்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க ஆயத்தமாகி வருகிறது. கலிஃபோர்னியாவில் தற்போதும் பலர் பெட்ரோல் & டீசல் கார்களை பயன்படுத்தி வருவதால், அவற்றை விற்பனை செய்ய தடை இந்த மாகாணத்தில் உடனடியாக விதிக்கப்பட போவதில்லை.

2035ஆம் ஆண்டிற்கு பிறகு எலக்ட்ரிக் & ஹைப்ரீட் கார்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் விதமாக பெட்ரோல் & டீசல் கார்கள் விற்பனைக்கு தடைவிதிக்கும் அட்வான்ஸ்டு க்ளீன் கார்ஸ் 2 திட்டத்திற்கு அனுமதியளிக்க கலிஃபோர்னியா மாகாணத்தின் காற்று வளங்கள் அமைப்பு ஒருமனதாக மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

பெட்ரோல் & டீசல் கார்களின் விற்பனையை நிறுத்திக்கொள்ள பல்வேறு நாடுகள் திட்டமிட்டு வந்தாலும், தற்போதைக்கு எந்தவொரு நாட்டிலும் அதற்கு முழு மனதாக அனுமதியளிக்கவில்லை. ஆகையால், இப்போதே பெட்ரோல் & டீசல் கார்கள் விற்பனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்க கோரும் முதல் மாகாணமாக கலிஃபோர்னியா விளங்குகிறது.

இதுகுறித்து கலிஃபோர்னியா மாகாண காற்று வளங்கள் அமைப்பின் தலைவர் லியான் ரண்டோல்ஃப் கருத்து தெரிவிக்கையில், "இது கலிஃபோர்னியாவிற்கும், எங்களது கூட்டணி மாகாணங்களுக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அதுமட்டுமின்றி, எதிர்கால பூஜ்ஜிய மாசு உமிழ்வை நோக்கிய பயணத்திற்கு நாங்கள் அமைத்துள்ள இந்த முதல் படியால் உலகிற்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்" என்றார்.

2035ஆம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோல் & டீசல் கார்களின் விற்பனையை முழுவதுமாக தடை செய்யும் முனைப்பில் இருக்கும் கலிஃபோர்னியா மாகாண அரசாங்கம், மொத்த வாகனங்கள் விற்பனையில் எலக்ட்ரிக் & ஹைப்ரிட் வாகனங்களின் பங்கை 2026க்குள் 35%-ஆகவும், 2030இல் 68% ஆகவும் எட்ட திட்டமிட்டுள்ளது.

அதன்பின் 2035க்குள் 100% ஆக எட்டுவது இந்த அமெரிக்க மாகாண அரசின் இலக்கு. இந்த திட்டத்திற்கு பைடன் அரசாங்கம் ஒப்புதல் அளிப்பதே இந்த விஷயத்தில் முக்கியமானது ஆகும். அமெரிக்காவில் டெஸ்லா, ரிவியன் போன்ற முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்களிடையே உள்ள பிரச்சனை என்னவென்றால், அவற்றின் அதிகப்படியான விலை தான். அதுமட்டுமில்லாமல், சில செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் வாகனங்களில் குறைவான ரேஞ்ச் மட்டுமே கிடைப்பதும் மக்கள் பலரால் குறைய பார்க்கப்படுகிறது. அதாவது வாகனத்தின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினாலும், குறைந்த தூரத்திற்கு மட்டுமே பயணம் என்பது பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் உள்ள இந்த குறைப்பாடுகள் அனைத்தும் சில காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் இந்த விஷயங்களில் புதிய மேம்பாடுகளை அடைய தயாரிப்பு நிறுவனங்கள் முற்படும். சார்ஜிங் நிலையங்களும் பல்வேறு இவி சார்ஜிங் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டு வருவதால், இதுவும் பெரியதாக பிரச்சனையாக இருக்காது.


Click it and Unblock the Notifications