உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்தில் போகலாம்... வருகிறது அதிவேக ஹைப்பர்சோனிக் விமானம்...
உலகின் எந்த மூலைக்கும் ஒரு மணி நேரத்தில் சென்று விடும் வாய்ப்பை வழங்கும் புதிய ஹைப்பர்சோனிக் விமானம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான துறையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று ஹைப்பர்சோனிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டால், உலகின் எந்தவொரு பகுதிக்கும் வெறும் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஹைப்பர்சோனிக் விமானத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டோக்கியோ நகருக்கு பயணிகள் வெறும் 1 மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆனால் சாதாரண விமானத்தில் சென்றால், 11 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரை ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஹைப்பர்சோனிக் விமானம் பயணங்களை இன்னும் விரைவாக்கும்.

விர்ஜின் ஆர்பிட் எல்எல்சி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ஷாரா டகுள்பை மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ டகுள்பை ஆகியோரால், வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் என்பதால், ஷாரா டகுள்பையின் பாட்டியுடைய 95வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் இந்த தம்பதிக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாகவே விரைவாக பயணிக்க கூடிய ஹைப்பர்சோனிக் விமானங்களை உருவாக்கும் திட்டத்தை இந்த தம்பதியினர் கையில் எடுத்தனர். இதற்கு முன்பாக சூப்பர்சோனிக் விமானங்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். சூப்பர்சோனிக் விமானங்கள் ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்க கூடியவையாகும்.

ஆனால் வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹைப்பர்சோனிக் விமானங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது சூப்பர்சோனிக் விமானங்களை விடவும் வேகமாக பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 9,000 மைல்கள் வேகத்தில் பயணிக்க கூடிய ஹைப்பர்சோனிக் விமானங்களை உருவாக்க வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதாவது மணிக்கு 14,484 கிலோ மீட்டர்கள் வேகத்தில் இந்த ஹைப்பர்சோனிக் விமானங்கள் பறக்கும். இது கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு வேகமானது ஆகும். ஒலியின் வேகம் மணிக்கு 1,234 கிலோ மீட்டர் மட்டுமே. வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விமான போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்கள் ஹைப்பர்சோனிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களின் முயற்சியில் இருந்து எங்களது முயற்சி முற்றிலும் வேறானது என ஷாரா டகுள்பை மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ டகுள்பை கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆண்ட்ரூ டகுள்பை கூறுகையில், ''கடந்த சில தசாப்தங்களாக மனிதர்கள் இந்த முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இம்முறை இந்த திட்டம் வேலை செய்யும்'' என்றார். ஆனால் இந்த ஹைப்பர்சோனிக் விமானத்தின் வடிவம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் மூன்று மாடல்களை வைத்து சோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இறுதி வடிவம் பெறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த ஹைப்பர்சோனிக் விமானம் பயன்பாட்டிற்கு வந்தால், விமான போக்குவரத்து துறையில் அது மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








