கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் கார்... மூக்கின் மேல் விரல் வைத்த மக்கள்!
அனைவருக்கும் பிடித்த அம்பாஸிடர் காருக்கு, இந்தியாவை சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய தோற்றத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் அம்பாஸிடர் என்றால், சொல்லவே வேண்டாம். அம்பாஸிடர் கார் பிடிக்காது என கிட்டத்தட்ட யாருமே சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்திய மக்கள் மனங்களில் அம்பாஸிடர் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது அம்பாஸிடர் கார் விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்தியாவில் அம்பாஸிடர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் கூட அம்பாஸிடர் காரை ஒரு சிலர் புதிது போல் பராமரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. ஒரு சிலர் பழைய அம்பாஸிடர் கார்களுக்கு மாடிஃபிகேஷன் மூலம் புதிய தோற்றத்தையும் வழங்கி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்த கலைஞர் ஒருவர் இதற்கு ஒரு உதாரணம்.

அம்பாஸிடர் காரை கலைநயமிக்க வாகனமாக மாற்றியுள்ள அந்த கலைஞரை பற்றிதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். சுந்தர் குர்ஜார் என்ற அந்த கலைஞர், பழைய அம்பாஸிடர் காருக்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்கியுள்ளார். 1,000 கிலோவிற்கும் அதிகமான 'ஸ்கிராப் மெட்டீரியல்' மூலம் அவர் இதனை செய்துள்ளார்.

அதாவது ஓட்டை, உடைசல்களை கொண்டு அவர் அம்பாஸிடரை கலைநயமிக்க வாகனமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து சுந்தர் குர்ஜார் கூறுகையில், ''விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட அம்பாஸிடர் காரில், புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நான் நினைத்தேன். இந்த காரில் சுமார் 700 கிலோ நட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சுமார் 400 கிலோ அளவிற்கு வாகன செயின் மற்றும் மற்ற பாகங்கள், பசை மூலமாக இந்த காரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்கிராப் மூலமாக இதனை உருவாக்கியிருப்பதுதான் சிறப்பம்சம்'' என்றார். இரும்பு கழிவுகள் மூலம் இந்த காரின் வெளிப்புற 'பாடி' உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அத்துடன் உள்ளேயும், வெளியேயும் பாரம்பரியமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மூலமாகவும் இந்த கார் அழகுபடுத்தப்பட்டுள்ளது. பழைய அம்பாஸிடர் காரை கலைநயமிக்க வாகனமாக மாற்றுவதற்கு சுந்தர் குர்ஜார் 3 மாதங்களை எடுத்து கொண்டுள்ளார். இந்த 3 மாத கால உழைப்பு, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க செய்துள்ளது.

அம்பாஸிடர் கார் ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார்களில் அம்பாஸிடர் மிகவும் முக்கியமானது. அம்பாஸிடர் காரின் உற்பத்தி கடந்த 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டுதான் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 56 வருடங்கள் அம்பாஸிடர் கார் உற்பத்தியில் இருந்தது.

இந்திய பிரதமர்கள் கூட அம்பாஸிடர் காரை பயன்படுத்தியுள்ளனர். மேலும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரின் ஆஸ்தான காராகவும் கூட அம்பாஸிடர் இருந்து வந்தது. ஆனால் தற்போது அம்பாஸிடர் கார்களை சாலையில் பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. இருந்தாலும் கார் ஆர்வலர்கள் ஒரு சிலர் அம்பாஸிடர் கார்களை இன்னமும் கூட வைத்துள்ளனர்.

அம்பாஸிடர் கார் இந்திய சந்தையில் புதிய அவதாரத்தில் திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் காணப்படுகிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்லும். இதற்கிடையே சுந்தர் குர்ஜாரை போல, அம்பாஸிடர் காரை இந்தியாவில் பலரும் மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இதில் பல மாடிஃபிகேஷன்கள் செய்திகள் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த வரிசையில் கலைஞர் சுந்தர் குர்ஜார் தற்போது அம்பாஸிடர் காரில் செய்துள்ள மாடிஃபிகேஷனும் அனைவரையும் கவர்ந்துள்ளது. சுந்தர் குர்ஜார் இந்த அம்பாஸிடர் காரை தொடர்ந்து மெருகேற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலைநயமிக்கதாக மாற்றப்பட்ட இந்த அம்பாஸிடர் சாலையில் வந்தால், நிச்சயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








