ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையானவர்களுக்கான விஷேச டிராஃபிக் சிக்னல்!
ஸ்மார்ட்போன்களில் மூழ்கியபடி சாலைகளை கடந்து செல்பவர்களுக்காக விஷேஷ டிராஃபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
நாளுக்கு நாள் மெருகேறி வந்துகொண்டிருக்கும் மொபைல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக சாதாரண போன்களை மக்கள் கைகளில் காணமுடியவில்லை. அனைத்தும் ஸ்மார்ட்ஃபோன் மயமாகி வரும் வேளையில், அதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மொபைல் ஆப்ஸ் போன்றவற்றால் பலரும் மொபைல்களுக்கு அடிமைகளாக மாறி வருகின்றனர்.

கேம்ஸ், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என மொபைல் போன்களுக்கு அடிமைகளாக மாறி வருவதால் பல வழிகளில் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. தூக்கமின்மையில் தொடங்கி மெல்ல மெல்ல உடல்நலனை இழந்து வரும் நிலையில், சாலைகளில் செல்லும் போது பலரும் மொபைல் ஸ்கிரீனையே பார்த்துக்கொண்டு செல்வதால் விபத்துக்களிலும் சிக்கிவிடுகின்றனர்.
சமீபத்தில் கூட பெங்களூரு நகரில் மொபைல் போன் பார்த்துக்கொண்டே சென்ற ஒருவர் மீது அரசுப் பேருந்து இடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடம் சாலைகளில் நடந்து செல்கையில் கவனம் தேவை என்பதனையும் உணர்த்தியது.

சமீபகாலங்களில் உலக நாடுகள் முழுவதிலும் இது கவலையளிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மொபைல் போன்களில் அதிக கவனம் செலுத்துவோர் ஆபத்து நிறைந்த சாலைகளில் செல்லும் போது துளியும் கவனம் செலுத்துவதில்லை இதனால் பலரும் விபத்துகளிலிம் சிக்கி உயிரை விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இப்பிரச்சனையை சமாளிக்க நெதர்லாந்து நாட்டில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளனர். பொதுவாக சாலைகளில் டிராஃபிக் சிக்னல் கம்பங்கள் இருக்கும், ஆனால் மொபைல் போன்களில் மூழ்கியிருப்போர் தலைநிமிர்ந்து அதனை பார்ப்பது இல்லை.

ஆதலால், நெதர்லாந்து நாட்டில் உள்ள போடேகிரேவன் எனும் நகரத்தில் சாலைகளை கடக்க நடைபாதையிலேயே நல்ல வெளிச்சத்துடன் சிக்னல் விளக்கை அமைத்துள்ளனர். இது தரையிலேயே இருப்பதால் மொபைல்களுடன் குனிந்தபடி செல்வோர் இதனை சரியாக கவனிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சிக்னலை கவனிக்காமல் சாலையை கடந்து விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு தவிர்க்கப்படலாம்.

ஹச்ஐஜி டிராஃபிக் லைட்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த சிக்னல் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிட்சார்த்த முயற்சியாக இந்நகரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மற்ற நகரங்களிலும் இதைப்போல் நடைபாதையிலேயே சிக்னல்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மீது அக்கறை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஒருபுறம் இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் கிளம்பியுள்ளது. இத்திட்டம் சாலைகளில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்தாமல், மொபைல் போன்களின் மீது கவனம் செலுத்த ஆதரிப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

17 கோடி மக்கள் தொகை கொண்ட நெதர்லாந்தில் மக்களிம் பாதுகாப்புக்காக சிரத்தையுடன் திட்டங்கள் செயல்படுத்தும் போது உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியாவில் இதைவிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சாலைகளில் நடந்து செல்லும்போது மொபைல் போன்களில் அதீத கவனம் செலுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








