சாலையை கூட்டி பெருக்கிய போலீஸ்காரர்... காரணத்தை கேட்டதும் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம்...
போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையை கூட்டி பெருக்கும் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துக்களால் உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கை நடத்தி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் சில சமயங்களில் போக்குவரத்து காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வாகன ஓட்டிகளின் நன்மைக்காக போக்குவரத்து காவலர் ஒருவர் செய்துள்ள காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள டவுன் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் லலித் மோகன். இவர் சமீபத்தில் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் துடைப்பத்தால் சாலையை கூட்டி விட்டார். போக்குவரத்து காவலர் சாலையை பெருக்கி விடும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

குப்பைகள், சிறு சிறு கற்கள் காரணமாக வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தில் சிக்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் சாலையை கூட்டி விட்டுள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இதன் மூலம் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த செயலுக்காக போக்குவரத்து காவலர் லலித் மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே நேரத்தில், இது அவருடைய பணி கிடையாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்டாக் மாநகராட்சி அதிகாரிகளும், துப்புரவு பணியாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இது ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கருத்துதான். ஆனால் எப்படி இருந்தாலும் கௌரவம் பார்க்காமல் வாகன ஓட்டிகளின் நலனுக்காக சாலையை கூட்டி பெருக்கிய போக்குவரத்து காவலர் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இதன் மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக போக்குவரத்து காவலர் லலித் மோகன் மாறியுள்ளார்.
லலித் மோகன் சாலையை கூட்டி பெருக்கும் காணொளி சமூக வலை தளங்களில் பலரையும் சென்றடைந்த நிலையில், இதற்காக அவரை அழைத்து உயர் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர். அனைத்து போக்குவரத்து காவலர்களும் இவரை போல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால், வாகன ஓட்டிகளுடனான பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








