கோவை டு லண்டன் சாகசப் பயணத்தை இனிதே நிறைவு செய்த கோவை பெண்மணிகள்!
டாடா ஹெக்ஸா காரில் லண்டனுக்கு மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் கோவையை சேர்ந்த மூன்று பெண்கள். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த், பொள்ளாச்சி சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பால் ஆகியோர் டாடா ஹெக்ஸா காரில் லண்டனுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டனர்.

நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை போற்றும் விதத்திலும், எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு நிதி சேர்க்கவும் இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த 5ந் தேதி சவால்கள் நிறைந்த தங்களது மிக நெடிய பயணத்தை இந்த பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 26ந் தேதி கோவையில் புறப்பட்ட இந்த பெண்கள் 24 நாடுகளை கடந்து 11,134 கிமீ தூரம் பயணித்து கடந்த 5ந் தேதி லண்டனை அடைந்தனர். 72 நாட்களில் பல சவால்களை கடந்து இந்த பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

வழியில் பல்வேறு நில அமைப்புகளையும், உயிரினங்கள் வாழ தகுதியற்ற இடங்களையும் கூட கடந்துள்ளனர். மேலும், இவர்களுக்கு உதவியாக எந்தவொரு வாகனமும் வரவில்லை. மூன்று பெண்களும் தன்னந்தனியாக சென்று இந்த பயணத்தை முடித்துள்ளனர்.

அதாவது, சராசரியாக தினசரி 400 கிமீ தூரம் வரை பயணித்து இந்த பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு டாடா ஹெக்ஸா கார் வெகுவாக துணை நின்றுள்ளது. பல்வேறு சாலை நிலைகளை எதிர்கொள்ளும் விதத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

இந்த காரில் இருக்கும் 156 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் வேரிகோர்400 டீசல் எஞ்சின் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் பயணத்தை நிறைவு செய்ய உதவி இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், டார்க் ஆன் டிமான்ட் தொழில்நுட்பம் போன்றவையும் சிக்கலான சாலைகளையும் நம்பிக்கையுடன் இந்த பெண்கள் கடக்க உதவி இருக்கிறது.

இந்த பயணத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரில் வயர்லெஸ் சார்ஜர், கூடுதல் எரிபொருள் எடுத்துச் செல்வதற்கான ஜெர்ரி கேன், வழிகாட்டு சாதனம், கூடார அமைப்பு, சக்திவாய்ந்த ஜாக் போன்றவையும் கூடுதலாக வைக்கப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications








