சென்னையில் பைக்கில் செல்பவர்களுக்கு மாஞ்சா நூல் வடிவில் வரும் எமன்... இதற்கு முடிவே கிடையாதா?
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி மூன்று வயதான பிஞ்சு குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை கடந்துதான் வீடு வந்து சேர வேண்டி இருக்கிறது. இதில், பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி உயிர்களை காவு வாங்கும் அவல நிலை தொடர்ந்து நடக்கிறது.

பொதுவாக கோடை காலம் துவங்கும்போது மாஞ்சா நூல் மூலம் இணைக்கப்பட்ட பட்டங்களை பறக்கவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், பணத்தாசை, ஏரியா புள்ளிங்கோ பட்டத்திற்காக நடக்கும் போட்டி இவற்றால் எந்நேரமும் இந்த விபரீத விளையாட்டை பலர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

கடுமையான சட்டங்கள், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி இந்த விளையாட்டு ஜரூராக நடந்து வருகிறது. சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி பைக்கில் சென்ற மூன்று வயது பிஞ்சு குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அல்ப சந்தோஷத்திற்கு மீண்டும் ஒரு குழந்தையை மாஞ்சா நூல் அரக்கர்கள் பலிவாங்கி உள்ளனர்.

சென்னை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகன் அபினேஷ்வரனுடன் பைக்கில் உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரன் கழுத்தில் மாட்டி இறுக்கிவிட்டது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக வெட்டியதால், ரத்தம் வெளியேறி மயங்கி சரிந்தான்.

இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக, குழந்தை உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பலரின் ரத்தத்தை குடிக்கும் எமனாக மாறும் இந்த மாஞ்சா நூல் மூலமாக பட்டம் விடுவதை தடுப்பதற்காக போலீசார் மேற்கொண்டு வரும் முயற்சிகள் போதிய பலனளிக்கவில்லை என்றே தெரிகிறது. சிந்தாதிரி பேட்டை, சவுகார் பேட்டை, வண்ணாரப் பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இந்த மாஞ்சா நூல் தயாரிப்பை சில குடும்பங்கள் குலத்தொழிலாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டம் விடும் போட்டிகளுக்காக நூல் அறுபடாமல் உறுதியாக இருப்பதற்காக பல நச்சுப் பொருட்கள் கலந்த கலவையை நூலின்மீது தடவி மாஞ்சா நூல் உருவாக்கப்படுகிறது. அரோட்டா மாவை காய்ச்சி அதில் ட்யூப்லைட் துகள், கண்ணாடிகளை பொடியாக்கி கலக்கி இந்த மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர்.

இந்த கலவையில் வஜ்ரம், மயில்துத்தம், சப்பாத்திக் கள்ளி ஆகியவற்றின் சாறும் கலக்கப்பட்டு மாஞ்சா நூல் மீது தடவப்படுகிறது. இதனால்தான், மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி காயம் பட்டால், நச்சுத் தன்மை ரத்தத்தில் கலந்து மரணம் சம்பவிக்கிறது.

சென்னையில் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.500 அபராதம் மற்றும் 6 மாத சிறை உள்ளிட்ட தண்டனை உள்ளிட்டவை இருந்தாலும், இதனை கட்டுப்படுத்த இயலாத அவல நிலை தொடர்கிறது. இந்த விஷயத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி முற்றிலும் ஒழிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், கடுமையான தண்டனைகளையும் வரையறுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








