அதிர்ச்சி... சபரிமலையில் பொன்னாரை தடுத்து நிறுத்தி ஹீரோவான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்தார் தெரியுமா?
சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரி தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களை மாடிபிகேஷன் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. டூவீலர் மற்றும் கார் என அனைத்து வகையான வாகனங்களிலும் மாடிபிகேஷன்கள் செய்யப்படுகின்றன. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை பல்வேறு வழிகளில் உரிமையாளர்கள் மாடிபிகேஷன் செய்கின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில், மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் மிக அதிகமாக உள்ளன.

கடவுளின் சொந்த தேசம் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தின் புவியியல் அமைப்பிற்கு, மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் அவசியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை, வாகனங்களை மாடிபிகேஷன் செய்த உரிமையாளர்களின் குழுக்கள் பல உள்ளன. அவர்கள் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கும், அரசுக்கும் கை கொடுத்துள்ளனர்.

குறிப்பாக கேரள மாநிலம் ஒரு முறை பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்தபோது, மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் மீட்பு பணிக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. மக்களை மீட்கும் பணியில் மட்டுமல்லாது, நிவாரண பொருட்களை வினியோகிக்கும் பணியிலும் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சாதாரண வாகனங்கள் மூலம் பயணிப்பது என்பது சவாலான காரியம். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் உதவியைதான் காவல் துறையே நாடியது. ஆனால் இவ்வளவு உதவிகளை செய்தாலும், மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக மறுபக்கம் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆம், இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானது. எனவே மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அதிக முனைப்பு காட்டுவது என்னவோ கேரள மாநிலத்தின் காவல் துறையும், மோட்டார் வாகன துறையும்தான்.

மாடிபிகேஷன் செய்யப்பட்ட காரணத்தால், கடந்த காலங்களில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களை கேரள மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அபராதமும் விதித்துள்ளனர். போலீசாரின் இத்தகைய நடவடிக்கை மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க கூடாது எனவும், போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்தும் கேரள மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் தரப்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டங்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

இப்படி ஒரு சூழலில் போலீசாரே தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். போலீஸ் ஸ்மிருதி திவாஸை முன்னிட்டு, திருச்சூர் போலீஸ் கமிஷனர் யதீஷ் சந்திரா சார்பில், பைக் பேரணி ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில், கேரள மாநில காவல் துறையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இது 40 கிலோ மீட்டர் பேரணியாகும்.

இதில், 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சீருடையில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் போலீசார் பெரும்பாலும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களைதான் பயன்படுத்தினார். இந்த பேரணி பெரும் வெற்றியை சந்தித்துள்ளது. எனவே போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் தற்போது இந்த பேரணி போலீசாருக்கு பெரும் தலைவலியாகவும் மாறியுள்ளது.

இந்த பேரணியில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மோட்டார்சைக்கிள்களில் ஹெவி மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்ததை கேரள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவ்வளவு ஏன்? போலீஸ் கமிஷனர் யதீஷ் சந்திரா ஓட்டிய மோட்டார்சைக்கிளில் கூட பல்வேறு மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தன. இதனால் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் கொதித்து போயுள்ளனர்.

இந்த பேரணியில் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்கள், ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஆஃப்டர் மார்க்கெட் ஹேண்டில்பார் உடன் மாடிபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடிபிகேஷன்கள் அனைத்தும் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுபோன்று மாடிபிகேஷன்கள் செய்யப்பட்ட பைக்குகளை ஸ்பாட்டிலேயே போலீசாரால் பறிமுதல் செய்ய முடியும்.

ஆனால் இந்த பேரணியில் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்ட பைக்குகளும் கூட இந்த பேரணியில் உலா வந்துள்ளன. ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு எதிராகதான் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் போலீசார் பயன்படுத்திய பைக்குகள் அவர்களது சொந்த பைக்குகளா? அல்லது வேறு எங்கேயாவது இருந்து வாங்கினார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த பேரணியில் பயன்படுத்தப்பட்ட மாடிபிகேஷன் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த 40 கிலோ மீட்டர் ரேலியில் பயன்படுத்தப்பட்ட மாடிபிகேஷன் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிகழ்விற்கு எதிராக காவல் துறையோ அல்லது மோட்டார் வாகன துறையோ நடவடிக்கை எடுக்குமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா யாரென்று தெரிகிறதா? சபரிமலையில் கடந்த ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணனை காவல் துறை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் நாடு முழுக்க கவனம் பெற்றது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய அதிகாரி யதீஷ் சந்திராதான்.

விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது என்று கூறும் கொள்கையுடைய காவல் துறை அதிகாரியான யதீஷ் சந்திராவே தற்போது விதிமுறைகளை மீறியிருப்பது கேரளாவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது நியாயமா சாரே?


Click it and Unblock the Notifications








