டைகர் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
வன ஆர்வலர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் கவரும் விதத்தில், டைகர் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 5ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு வரும் அக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் சேவையை துவங்க உள்ளது. இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விசேஷ சுற்றுலா
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் பந்தவ்கர் மற்றும் கன்ஹா தேசிய வன விலங்கு பூங்காக்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த இரு வன விலங்கு பூங்காக்களிலும் புலிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

டைகர் எக்ஸ்பிரஸ்
புலிகள் சரணாலய பகுதிக்கு இயக்கப்படுவதாலும், அருகி வரும் விலங்கினமான புலிகள் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் விதத்திலும் இந்த ரயிலுக்கு டைகர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

சொகுசு வசதிகள்
இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டது. சாப்பாட்டு கூடம், சிறிய நூலகம், ரெஸ்ட் ரூம் போன்றவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுலா அட்டவணை
டெல்லியிலிருந்து புறப்பட்டு மத்திய பிரதேசம் செல்லும் இந்த ரயில் 5 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட பயணத் திட்டத்துடன் இயக்கப்படும். ரயில் அல்லாமல், உணவுடன் சேர்த்து மூன்று இரவுகள் 3 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுலா இடங்கள்
ரயிலிலிருந்து இறங்கியவுடன் பயணிகள் வன விலங்கு பூங்காக்களில் சுற்றுலா செல்வதற்கு வாகன வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இதில், மூன்று முறை புலிகளை காண்பதற்கான டைகர் சஃபாரி பயண திட்டமும் அடங்கும். தவிரவும், ஜபல்பூர் அருகிலுள்ள துவாதர் நீர்வீழ்ச்சிக்கும் பயணிக்கும் வாய்ப்பும் உண்டு.

கட்டணம்
இந்த சொகுசு ரயிலில் பயணிப்பதற்கு ரூ.33,500 முதல் ரூ.49,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினருக்கு டைகர் சஃபாரிக்காக ரூ.4,000 கூடுதலாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications








