இனி டிரெயின்ல கண்ட நேரத்துல செல்போனுக்கு சார்ஜ் போட முடியாது... நேரக்கட்டுப்பாட்டை அறிமுகம் செய்த ரயில்வேஸ்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலெக்ட்ரிக் கேட்ஜெட்களின் அவசியம் இன்றியமையாததாக மாறி விட்டது. இதை உணர்ந்தே வாகன உற்பத்தி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்கள் தொடங்கி கார்கள் வரை என அனைத்திலும் செல்போன் மற்றும் டேப்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
இதேபோல், இந்தியன் ரயில்வேஸும் பயணிகள் சிறப்பான ரயில் பயண சேவையைப் பெற்றுக் கொள்ளும் விதமாக தனி பிளக் பாயிண்டுகளை ஒவ்வொரு ரயில் கம்பார்ட்மென்டிலும் வழங்கி இருக்கின்றது. ரயில் பயணிகளுக்கு பல்வேறு சௌகரியமான சேவைகளை வழங்கி வருவதன் அடிப்படையில் இந்த வசதியையும் அது வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த பிளக் பாயிண்டுகளில் செல்போன் மட்டுமின்றி, டேப் மற்றும் மடிக் கணினி என எந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த வசதிக்கே ஆப்பு வைக்கும் வகையில் ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது, இந்தியன் ரயில்வேஸ்.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ரயில்வேஸ் அறிமுகம் செய்து இருக்கின்றது. சமீப சில காலமாக அரங்கேறி வரும் செல்போன் வெடிப்பு சம்பவங்களே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

நம்மில் பலர் வீடுகளில் இருப்பதைப் போலவே ரயில்களில் பயணிக்கும்போது இருந்துவிடுகின்றனர். அதாவது, வீடுகளில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு திரும்பவும் செல்போனை எடுக்கும்போது ஸ்விட்சை ஆஃப் செய்வதே இல்லை. அது பகல், இரவு பாராமல் இயங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு ஒரு இரவு முழுக்க செல்போனை சார்ஜ் போட்டவாறு விடுவது மிகுந்த ஆபத்தான செயல் ஆகும்.
இதை அறியாமலேயே ஒரு சிலர் செல்போனுக்கு சார்ஜ் போட்டவாறு தூங்கிவிட சென்றுவிடுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல அந்த ரயிலில் பயணிக்கும் பிற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்த நேரிடும். இத்தகைய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கிலேயே இந்தியன் ரயில்வேஸ் செல்போன் மற்றும் மடிக்கணினி சார்ஜ் செய்யும் விஷயத்தில் நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கின்றது.
காலை 5 மணி தொடங்கி இரவு 11 மணி வரையில் மட்டுமே செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இரவு 11 மணிக்கு மேல் காலை 5 மணிக்குள் ரயில்களில் இருக்கும் பிளக் பாயிண்டுகளைப் பயன்படுத்த முடியாது. இந்த விதியையே இந்தியன் ரயில்வேஸ் நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில், இந்த விதி ஒன்றும் புதிது அல்ல என இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒன்றுதான் இப்போது மிக தீவிரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக அது தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு-ஹஸூர் ஷாகிப் நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகம் நேரம் சார்ஜ் செய்த காரணத்தினால் செல் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்திற்கு பின்னரே சார்ஜிங் நேரக் கட்டுப்பாடு ரயில்களில் அமல்படுத்தப்பட்டது. இதைத் தற்போது முழுமையாக அமலுக்குக் கொண்டு வருவதாக இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது.
தற்போது செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாட்டில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் அடுத்த செல்போன் வெடிப்பு நிகழ்வு அரங்கேறிவிடக் கூடாது என்கிற நோக்கிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இனி இரவு நேர பயணங்களின்போது செல்போன் மற்றும் மடிக்கணினி எதையும் சார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
இந்தின் ரயில்வேஸின் இந்த நடவடிக்கை ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. நம்மில் பலர் இரவு நேரங்களிலேயே ரயிலில் பயணிக்கக் கூடியவராக இருக்கின்றனர். ராத்திரி டிரெயின் ஏறினா, காலையில ஊரு போய் சேர்ந்திடலாம் என்கிற எண்ணத்திலேயே பலர் இரவு நேர ரயில் பயணங்களையே அதிகம் மேற்கொண்டு வருகின்றனர்.
சூழல் இப்படியாக இருக்க இரவு நேரத்தில் சார்ஜ்போட கட்டுப்பாடு விதிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில் இதைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வேஸ் நடைமுறைப்படுத்தி இருப்பதால் இதை கட்டாயம் நாம் வரவேற்றுதான் ஆக வேண்டும். இத்தகைய சூழலுக்கே நாம் அனைவரும் தற்போது தள்ளப்பட்டு உள்ளோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணிகளுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக பல்வேறு சூப்பரான சேவைகளை இந்தியன் ரயில்வேஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் சர்ச்சையை கிளப்பும் வகையில் சார்ஜிங் நேரக் கட்டுப்பாட்டை அது அமல்படுத்தி இருக்கின்றது. சார்ஜ் போட்டவாறு அப்படியே தூங்கி வழியும் நபர்களுக்கு இது தேவைதான் என கூறும் வகையிலேயே இந்த கட்டுப்பாடு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








