ஆட்டோபான் சாலையில் அதிவேகத்தில் கார், பைக் ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
ஆட்டோபான் சாலையில் கார், பைக் ஓட்ட விரும்புவோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
கார், பைக் எதுவாகினும், அதிவேகத்தில் செல்ல வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துவதற்கு சாதாரண சாலைகள் இடம் தருவதில்லை. ரேஸ் டிராக்குகளில் மட்டுமே ஓட்ட முடியும் என்கிற நிலை உள்ளது.

எனினும், உலகில் சில விரைவு சாலைகளில் அதிவேகத்தில் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன. அவ்வாறு, அதிவேகத்தில் கார், பைக்குகளை ஓட்டி பார்க்க விழைபவர்களுக்கு ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் சாலையில் ஓட்டி பார்ப்பது வாழ்நாள் கனவாக உள்ளது.

இதற்காக, உலகம் முழுவதும் இருந்து ஆட்டோபான் சாலையில் கார், பைக்கை ஓட்டி பார்ப்பதற்காக சுற்றுலா செல்பவர்கள் மிக அதிகம். இந்த நிலையில், ஆட்டோபான் சாலையில் ஓட்டி பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டி இருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோபான் சாலையில் செல்வதற்கு முன் வாகனம் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். எரிபொருள் முழுமையாக நிரப்பிக் கொள்வதும் நல்லது. ஆட்டோபான் சாலையில் எரிபொருள் இல்லாமல் நின்றால், அபராதம் செலுத்த நேரிடும்.

ஆட்டோபான் சாலையில் எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் ஓட்டலாம் என்பது தவறு. அந்த சாலையிலும் சில பகுதிகளில் வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வேகத்தை மீறுவோர், ரோந்து போலீஸ் அல்லது கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு உடனடியாக போலீசாரிடம் சிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகளை கொண்டது.

ஆட்டோபான் சாலையில் பகல் வேளையில் மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலும், இரவில் 90 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கு வேக வரம்பு உள்ளது. மோசமான கால நிலைகளிலும் வேக வரம்பு அமலுக்கு வந்துவிடும். எனவே, இந்த விஷயங்களை மனதில் வைத்து வாகனத்தை செலுத்த வேண்டும்.

வேக வரம்பு இல்லாத பகுதிகளில் எவ்வளவு வேகத்திலும் ஓட்டுவதற்கு வழி உண்டு. ஆனால், பிற வாகனங்களுக்கு தொந்தரவு தரும் வகையிலும், அபாயகரமாகவும் ஓட்டினால் நிச்சயம் பிடிபட்டு அபாரதம் செலுத்த வேண்டி இருக்கும்.

பொதுவாக வலது பக்க தடங்களில் செல்ல வேண்டும். ஓவர்டேக் செய்யும்போது மட்டுமே இடதுபக்க தடத்திற்கு வர வேண்டும். அதேபோன்று, மெதுவாக செல்லும் வாகனங்களை விரைவாக ஓவர்டேக் செய்து மீண்டும் வலது பக்க தடத்திற்கு மாறி விட வேண்டும்.

அதேபோன்று, நம்மூர் போல இஷ்டத்திற்கு எந்த பக்கம் வேண்டுமானாலும் ஓவர்டேக் செய்யலாம் என்ற எழுதப்படாத விதியை பின்பற்ற முடியாது. இடதுபக்கத்தில் மட்டுமே இந்த சாலையில் ஓவர்டேக் செய்ய வேண்டும். ஓவர்டேக் செய்யும்போது கண்டிப்பாக இண்டிகேட்டர்களை பயன்படுத்துவதும் அவசியம்.

இந்த சாலையில் முதல்முறையாக ஓட்டுபவர்கள் எடுத்தவுடனே 200 அல்லது 250 கிமீ வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் தன்மைகள், போக்குவரத்தை நிலையை புரிந்து கொண்டு மெதுவாக வேகத்தை அதிகரித்து மகிழலாம்.

சாலையில் இருந்து வெளியேறும்போதும், சாலைக்குள் நுழையும்போதும் மிக கவனமாக இருத்தல் அவசியம்.
ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுத்து செல்வதும் நல்லது. ஆட்டோபான் சாலையின் பல இடங்களில் ஓய்வு இடங்கள் உள்ளன.

இந்த சாலையில் பல வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் என்பதால், கவனக்குறைவு மற்றும் வெட்டிப் பேச்சை குறைத்துக் கொள்வதும் விபத்துக்களை தவிர்க்க உதவும். போதிய இடைவெளியில் செல்வதும் அவசியம்.

வேகமாக செல்ல வேண்டும் என்பதைவிட உங்களது பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து ஓட்டவும். மொத்தத்தில் இந்தியாவில் ஓட்டுவது போன்று ஓட்டினால் ஒரு பக்கம் இடி வாங்கிக் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை.


Click it and Unblock the Notifications