தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... எஸ்ஐ-க்கு போலீஸ் சுப்பிரண்டு வச்ச ஆப்பு... என்ன தெரியுமா...?
ஆட்டோ ஓட்டுநரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துணை ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க பாடம் புகட்டியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டு மக்களிடையே அதிகம் பரவியிருக்கும் சர்க்கரை வியாதியைப் போலவே அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் என்ற வியாதி பரவியுள்ளது. ஆனால், இது சர்க்கரை வியாதியை விட மிக மிக அதிக வீரியம் கொண்ட புற்று நோயை போன்றது.

கடந்த ஆண்டு வெளிநாட்டு தனியார் நிறுவனமான டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல், உலாகளவிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது.
அதிலும், தமிழகத்தில் மற்ற அரசு நிர்வாகங்களைக் காட்டிலும் காவல்துறையே லஞ்சம் வாங்குவதில் கையோங்கி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக காவல்துறையினர் சாலையோரத்தில் நிற்பதைப் பார்த்தாலே வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிடும். ஏன், பல நேரங்களில் ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் வாகன ஓட்டிகள்கூட போலீஸாரைக் கண்டு தலை தெரிக்க ஓடிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதற்கு போலீஸார்கள், கார்பரேட் நிறுவன ஊழியர்களைப் போல செயல்படுவதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கின்ற சூழ்நிலையிலும், "சரி வந்ததும் வந்திட்ட ஒரு பெட்டி கேஸ் மட்டும் போட்டுகிட்டு போ" என போலீஸார் கூறுவதாக வாகன ஓட்டிகள் புகார்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அதிலும், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் போன்றவர்கள் சிக்கிவிட்டால் அவர்களிடம் நூறு, இருநூறு என கரக்காமல் விடுவதே இல்லை என்றும் புலம்புகின்றனர்.

இந்த நிலையில், நாட்டை உலுக்குகின்ற வகையிலான ஓர் சம்பவம் நேற்று திருப்பூரில் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருந்த காவல் அதிகாரிக்கு தற்போது தகுந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் கூலிப்பாளையம் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் ராஜ். சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், வழக்கம்போல் தனது ஆட்டோவில் பிளாஸ்டிக் டிரம்கள் மற்றும் இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, அதேப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊத்துக்குளி காவல்நிலைய போலீஸார், அர்ஜூன் ராஜ் ஆட்டோவையும் மடக்கி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர், ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

இருப்பினும், அர்ஜூனிடம் ஏதேதோ காரணங்கள்கூறி ரூ. 200-னை வழங்கும்படி கூறியுள்ளார் எஸ்ஐ ராஜமூர்த்தி. ஆனால், தன்னிடம்தான் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதே, பிறகு எதற்காக நான் பணம் தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.
இதனால், கடுப்பாகிய சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோ ஓட்டுநரை தாக்க முயன்றதுடன், கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.

அவ்வழியே பலர் சென்றவாறு இருந்தபோதிலும் கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். இதனால், மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூன் ராஜ், சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் இருந்த டீசலை எடுத்து ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதல் கூறி, தடுத்தி நிறுத்தினர். பின்னர், போலீஸாரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர். எனவே, இந்த சம்பவம் காட்டு தீயாய் பரவியது. மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும், அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் துணை-ஆய்வாளர் ராஜ மூர்த்தியையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, போலீஸார்கள் ஈடுபட்ட அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், திருப்பூரில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








