கொரோனா தீவிரத்திலும் அதிரடி வேட்டை.. 11 ஆயிரம் பேருக்கு ஆப்பு வைத்த தமிழக காவல்துறை...
கொரோனா வைரஸின் தீவிரம் உச்சமடைந்து வரும் நிலையிலும் தமிழக போலீஸார் தங்களின் அதிரடி வேட்டையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு (144 தடை) உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது வருகின்ற 14ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவையைகளைத் தவிர்த்து வேறெதற்காகவும் வெளியே வரக்கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனால், பலர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

மக்களை கொரோனாவிடம் இருந்து காக்கும் நோக்கிலேயே இந்த தேசிய ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் சாலையில் சுற்றித் திரிந்த வண்ணமே இருக்கின்றனர். இதனால், அரசின் நோக்கம் கேள்விக்குறியாகி இருக்கின்றது. குறிப்பாக, கொரோனாவின் தீவிரத்தை உணராத சிலர் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையே நாட்டின் அனைத்து மாநிலங்களும் தற்போது அரங்கேறி வருகின்றது.

ஆகையால், விதிமீறுவோர்மீது அந்தந்த மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நடவடிக்கை மட்டுமின்றி கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக காவல்துறையினர் தேசிய ஊரடங்கு முடியும் வரை மக்கள் வெளியே வரவேக் கூடாது என்ற நோக்கில் சில கடுமையான நடிவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, தேவையற்ற நிலையில் வெளியே சுற்றி திரிபவர்கள்மீது வழக்கு பதிவு செய்தல் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகின்றது.
அந்தவகையில், தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களில் மட்டும் 17,668 பேர்மீது தடை மீறி வெளியேச் சுற்றித் திரிந்ததாக தமிழக போலீஸ் கைது செய்திருக்கின்றது.

தொடர்ந்து, இதுவரை 11,565 வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 14,815 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இந்த தேசிய ஊரடங்கு நாட்களில் பொதுமக்களிடம் அபராதமாக ரூ. 4.8 லட்சம் வரை வசூலித்திருப்பதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

மேற்கூறியவற்றில், சென்னையில் மட்டும் 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், சில இடங்களில் போலீஸார் வீணாக சுற்றி திரியும் இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் சில நேரங்களில் பணி முடித்து வீடு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்களும் சிக்கி விடுகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவின் தீவிரம் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தி வருகின்ற வேலையில், மறுபக்கம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகள் மேலும் கூடுதல் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கு விளக்குமளிக்கும் போலீஸார், "இளைஞர்கள் பலர் தேசிய ஊரடங்கை மீறும் வகையில் சுற்றி திரிந்த காரணத்தினாலயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக" தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் போலீஸார் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமலே உடனடியாக அபராதம் மற்றும் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் இறங்கிவிடுவதாக வாகன ஓட்டிகள் தரப்பில் புகார்கள் எழுந்த வண்ணமும் இருக்கின்றது.

இதே நடவடிக்கையில்தான் நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் கையாண்டு வருவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அத்தியாவசிய பணிக்காக வெளியேச் சென்று திரும்பிய இளைஞரை போலீஸார் இடை மறித்து தாக்கிய சம்பவம் அரங்கேறியிருந்தது.

இதன் பின்னர் போலீஸார் அந்நபரை தனியாக வரவழைத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். மேலும், வெளியேச் செல்லும்போது பாதுகாப்பு செல்லும்படி அறிவுறுத்தி அவருக்கு கிருமி நாசினி மற்றும் முகமூடிகளை காவலர்கள் வழங்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
போலீஸாரின் இந்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக மக்கள் தற்போது வெளியே வரவே அஞ்சுகின்றனர். சிலர் தங்களின் அத்தியாவசிய தேவைகளைக்கு கூட வெளியே வர தயங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








