டீசலுக்கு பதிலாக இனி கேஸ் மூலம் தமிழக அரசு பஸ்களை இயக்க முடிவு! இதுல இவ்வளவு லாபம் வருமா?
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் செயல்படுத்தி வரும் பஸ்களை எல்லாம் டீசல் எரிபொருளில் இருந்து எல்என்ஜி என்ற இயற்கை எரிவாயு மூலம் இயங்கும். பஸ்களாக மாற்றி இயக்க தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சோதனை முயற்சியையும் துவங்கியுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள டீசல் பஸ்கள் எல்லாம் மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
தமிழக முழுவதும் சுமார் 8 போக்குவரத்து கழகங்களை அமைத்து தமிழக அரசு அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறது. தமிழக முழுவதும் தற்போது 9000-த்திற்கும் அதிகமான பஸ்கள் தினம் தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் போக்குவரத்தை நம்பி தான் மிகப்பெரிய அளவு மாநில பொருளாதாரம் அமைந்துள்ளது.

தினமும் பஸ்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக போக்குவரத்துதுறை என்பது நஷ்டத்தில் இயங்கும் ஒரு துறையாக தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் டீசல் செலவு மற்றும் பராமரிப்பு செலவு தான். ஒரு பஸ் இயக்க வேண்டும் என்றால் அந்த பஸுக்கான ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மற்ற ஊழியர்களுக்கான ஊதியம் போக பஸ்ஸிற்கான டீசல் செலவு, பராமரிப்பு செலவு என பல்வேறு விதமான செலவுகள் இருக்கிறது.
இந்த செலவுகளை எல்லாம் டிக்கெட் விலையில்தான் தமிழக அரசு பெற வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் டீசல் செலவு தான்,. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் பஸ்கள் ஒரு லிட்டருக்கு 5-7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரவேண்டும் என்ற குறிக்கோளோடு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது.

தற்போது சராசரியாக 5.7 கிலோமீட்டர் மைலேஜ் தான் தமிழக போக்குவரத்து கழகங்களில் இயங்கும் பஸ்கள் தருகின்றன. இதன் காரணமாக செலவு அதிகமாக இருக்கிறது. இந்த செலவை குறைப்பதற்காக தற்போது போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புதிய யோசனை ஒன்றை கையில் எடுத்துள்ளனர். அதன்படி தற்போது இயங்கும் டீசல் பஸ்களை எல்என்ஜி கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மாற்றுவதன் மூலம் செலவை குறைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.
தமிழக போக்குவரத்து கழகங்களில் இயங்கும் ஒவ்வொரு பஸ்களும் ஒவ்வொரு விதமான மைலேஜ் தருகின்றன. அந்த பஸ் பயணிக்கும் பாதையில் உள்ள சாலைகளின் தரம் பஸ்ஸில் எத்தனை பயணிகள் பயணம் செய்கிறார்கள், பஸ் நீண்ட தூரம் பயணம் செய்கிறதா? குறுகிய தூரம் பயணம் செய்கிறதா? என்பதை எல்லாம் பொறுத்துதான் மைலேஜ் என்பது முடிவாகிறது. இதனால் மைலேஜ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து கழகங்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உள்ள டீசல் இன்ஜின் பஸ்களில் எல்என்ஜி சிலிண்டரை பொருத்தி அந்த எரிவாயு மூலம் இந்த இன்ஜினை இயக்கினால் அதற்காகவும் செலவு டீசல் செலவைவிட குறைவாக தான் இருக்கும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். இதற்காக பஸ்களில் உள்ள பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக எரிவாயு டேங்க்கை பொருத்த வேண்டும் அதைப் பொருத்தி அது எரிவாயு சரியாக இன்ஜினுக்குள் செல்லும்படி செட்டப்பை செய்ய வேண்டும். இதற்கான செலவு தனியாக ஆகும்.
இப்படியாக எல்என்ஜி சிலிண்டரை பொருத்தினால் அதில் எரிவாயுவில் இருக்கும் பட்சத்தில் ஒரு சிலிண்டரில் சுமார் 180 கிலோ எரிவாயுவை நிரப்ப முடியும். இப்படியாக நிரப்பினால் பஸ் 850 முதல் 900 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக மாறும். இதன் மூலம் பெரிய அளவுக்கு பணம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இதை சோதனை முயற்சியாக செய்ய போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதையடுத்து விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை போக்குவரத்து கழகத்தில் தலா ஒரு பஸ்ஸை சோதனை முயற்சியாக சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவந்து சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எப்படியாக செயல்படுகிறது என்பதை கணக்கிட்டு இது வெற்றி பெற்றும் பட்சத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து டீசல் பஸ்களையும் படிப்படியாக எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் பஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை நாம் கணக்கிட்டு பார்க்கும்போது இதில் பெரிய அளவில் லாபம் இருப்பதாக தெரியவில்லை. தற்போது டீசல் இன்ஜின் மூலம் 5.7கிலோமீட்டர் அளவிற்கு ஒரு வாகனம் மைலேஜ் கொடுக்கிறது என்றால் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க ரூ16 செலவாகிறது என அர்த்தம் ஆகும். இதுவே எல்என்ஜி கேஸ் செலவை நாம் கணக்கிடும்போது 180 கிலோ எரிபொருளில் 850-900 கிலோ மீட்டர் வரை வாகனம் பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் எல்என்ஜி கேஸ் ஒரு கிலோ 80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பார்த்தால் முழுமையாக டேங்கை நிரப்ப ரூபாய் 14,400 செலவாகும். அதன் மூலம் 900 கிலோ மீட்டர் இந்த வாகனம் பயணிக்கிறது என்றால் ஒரு கிலோமீட்டருக்கு அதே 16 ரூபாய் தான் செலவாகிறது. இதனால் பெரிய அளவில் பணத்தை சேமித்து விட முடியுமா எனக் கேட்டால் அது சந்தேகம்தான்.
ஆனால் இப்படியாக எல்என்ஜி எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் மற்றொரு நன்மை இருக்கிறது. டீசல் எரிபொருளை பயன்படுத்தினால் அதிக காற்று மாசு ஏற்படும் எல்என்ஜி எரிபொருள் டீசலை விட குறைவான காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் எல்என்ஜி எரிபொருளை பயன்படுத்தும் போது பராமரிப்பு செலவும் குறைவாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக போக்குவரத்து துறை டீசல் இன்ஜினை மாற்றி எல்என்ஜி எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து எடுத்த முடிவு நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் இது பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தாது. இதை மிச்சப்படுத்துவதற்காக அரசு தனது வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் திறன் ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி அதை முறைப்படுத்தினாலே மிகப்பெரிய அளவில் மைலேஜ் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications









