ஒரு கிமீக்கு ரூ4.67 கம்மி செலவு! டீசல் பஸ்களை சிஎன்ஜி பஸ்களாக மாற்றினால் இவ்வளவு லாபமா?
தமிழக அரசு இயக்கும் பஸ்களை சிஎன்ஜியாக மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், சோதனை கட்டமாக தற்போது சில பஸ்கள் மட்டும் சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு பஸ்க்கு ரூபாய் 12000 வரை லாபம் கிடைப்பதாக தற்போது தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் சிஎன்ஜியாக மாற்றியது. தமிழக அரசுக்கு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு இயக்கும் பஸ்கள் எல்லாம் தற்போது டீசல் மூலம் இயக்கும் பஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான எரிபொருளை பயன்படுத்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு டீசல் பஸ்களுக்கு மாற்றாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி ஆகிய எரிபொருள் மூலம் இயங்கும் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஏற்கனவே மதுரை, சேலம், கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பஸ்கள் வீதம் மொத்தம் 6 பஸ்கள் சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் ஏற்கனவே டீசல் பஸ்களாக இயக்கப்பட்டு வந்தது. அதில் சிஎன்ஜி கிட்களை பொருத்தி சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்களாக இது மாறி உள்ளது.
இப்படியாக பஸ்கள் மாற்றப்பட்டு 50 நாட்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பஸ்களுக்கான சதவீதங்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு டீசல் மூலம் இயங்கும் நிலையில், இவ்வளவு செலவினங்கள் ஏற்படுகிறது, பெட்ரோல் மூலம் இயங்கும் நிலையில் எவ்வளவு செலவினங்கள் ஏற்படுகிறது என ஒப்பீடு செய்து செய்யப்பட்டு பார்க்கப்பட்டது. அதில் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்குவதால் பஸ்கள் அதிக லாபத்தில் இயங்குவது தெரிய வந்துள்ளது.

மதுரை போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ் சிஎன்ஜி மூலம் 2697 கிலோமீட்டர் இயங்கி உள்ளது. இதே தூரத்தை டீசல் மூலம் இயங்க வேண்டும் என்றால் 519லிட்டர் டீசல் செலவாகி இருக்கும். ஆனால் இந்த பஸ் வெறும் 437கிலோ சிஎன்ஜியில் இந்த தூரத்தை கடந்துள்ளது. அதாவது டீசலில் இயங்கினால் லிட்டருக்கு 5.2 கிலோமீட்டர் தான் மைலேஜ் வந்திருக்கும். ஆனால் அதே பஸ் சிஎன்ஜி-யில் இயங்கும் போது 6.17கிலோமீட்டர் மைலேஜ் தந்துள்ளது.
ஏற்கனவே செலவீனங்களை வைத்து பார்க்கும்போது டீசலில் இந்த பஸ் இயங்கி இருந்தால் எரிபொருளுக்காக மட்டும் ரூபாய் 47,361 செலவாகி இருக்கும். ஆனால் சிஎன்ஜி-ல் இந்த பஸ் இயங்கும்போது ரூபாய் 34, 755 தான் செலவாகியுள்ளது. அதாவது 12,606 ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதை ஒரு கிலோ மீட்டருக்கு கணக்கு செய்தால் ரூபாய் 4.67 மிச்சமாகி உள்ளது.
டீசல் பஸ்களை சிஎன்ஜி பஸ்களாக மாற்றுவதற்கு செய்த செலவை சிஎன்ஜி பஸ்கள் ஒரே மாதத்தில் மீட்டுக் கொடுத்துள்ளன. இனி அடுத்தடுத்த மாதங்களில் இந்த பஸ்கள் இயங்கும்போது கிடைக்கும் லாபம் அரசுக்கு கிடைக்கும் லாபமாகவே கருதப்படும். ஒரு பஸ்க்கு மாதம் 12,000 மிச்சம் ஆகிறது என்றால் ஆயிரக்கணக்கான பஸ்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அந்த பஸ்கள் எல்லாம் சிஎன்ஜியாக மாற்றப்பட்டால் ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.
இது மட்டுமல்ல டீசல் பஸ்கள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்தன. சிஎன்ஜி பஸ்களாக இருந்தால் இதை சுற்றுச்சூழலுக்கு டீசல், பஸ்கள் அளவுக்கு மாசுவை ஏற்படுத்தாது. சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி ஆகிய எரிபொருட்கள் எல்லாம் பெட்ரோலிய மூலப்பொருள் இல்லாமல் விவசாய கழிவுகள் உள்ளிட்ட இயற்கையான விஷயங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனால் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது.
தமிழக அரசு பஸ்களில் சிஎன்ஜி பொருத்தப்பட்டு வெற்றிகரமாக தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், இனி வரிசையாக ஒவ்வொரு பஸ்சாக டீசல் பஸ் நிலையிலிருந்து சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் டீசல் பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் தமிழக அரசு மிகப்பெரிய லாபத்தை ஈட்டப் போகிறது.
8 போக்குவரத்து கழகங்களில் உள்ள தமிழக அரசு பஸ்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 78.7 லட்சம் கி.மீ இயங்குகிறது. அத்தனை பஸ்களும் சிஎன்ஜி பஸ்களாக மாறினால் ஒரு நாளுக்கு ரூ3.6 கோடி தமிழக அரசு லாபமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை ஒரே ஒரு சிஎன்ஜி பஸ் மட்டுமே தீ பிடித்துள்ளது. இது குறித்த விசாரணை நடந்துவருகிறது. இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் சரி செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு பஸ்களில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை புகுத்தி அதை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள நிலையில், விரைவில் அனைத்து பஸ்களும் சிஎன்ஜி பஸ்களாக மாற வாய்ப்புள்ளது. இதை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் டீசல் பஸ்களை சிஎன்ஜி பஸ்களாக மாற்றினால் மிகப்பெரிய அளவில் சிஎன்ஜி தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும். சுற்றுச்சூழல் மாசும் குறையும்.


Click it and Unblock the Notifications








