முதல்முறையாக 3+2 சீட் உடைய அதிநவீன ஏசி பஸ் அறிமுகம்: முதல் பயணம் இலவசம் என அறிவிப்பு!
முதல்முறையாக தமிழகத்தில் 3+2 என்கிற முறையில், அதாவது ஒரு பக்கம் மூன்று சீட்டும், மறுபக்கம் இரண்டு சீட்டுகளையும் கொண்ட அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள ஏசி பஸ்களை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

தனியார் பஸ்களை மிஞ்சும் வகையில் புத்தம் புதிய ஏசி மற்றும் சொகுசு பஸ்களை தமிழக அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக களமிறக்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வந்த பெரும்பாலான பேருந்துகள் மேற்கூரை, ஜன்னல், படிகட்டு, சீட் ஆகியவை உடைந்து பழுதடைந்து காணப்பட்டுவந்த நிலையில், அவற்றை மாற்றும் விதமாக, தமிழக அரசு 133 கோடி ரூபாய் செலவில் 500 புதிய பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியுள்ளது.

சமீபகாலமாக தமிழக போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்துகள் படுமோசமான நிலையில் இருப்பதைக் கண்டிருப்போம். அவ்வாறு மழைக் காலங்களில் பஸ்ஸிற்குள்ளேயே குடைப்பிடித்துச் செல்லும் சூழல் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால், நமது போக்குவரத்துக் கழகத்தின்மூலம் இயக்கப்படும் பேருந்துகள் அந்த அளவிற்கு மோசமாக ஓட்டை உடைச்சலுமாக காணப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் அரசுப் பேருந்தில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய சவலாக அமைந்திருந்தது.

இருப்பினும் ஏழை எளிய மக்கள் வேறுவழியின்றி அரசுப்பேருந்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவில்லை. இந்தநிலையில் தான், மிகப்பெரிய அச்சுறுத்தலாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தால் தமிழக அரசு பேருந்தில் பயணிப்பது, எமனுடன் பயணிப்பதைப் போன்ற உணர்வை பலருக்கு ஏற்படுத்துவதைப்போல் அந்த விபத்து அமைந்தது.

தமிழ அரசுப் போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று புனலூரில் இருந்து ராஜபாளையம் நோக்கிப் புறப்பட்டது. இதில், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்க சக்கரத்துக்கு மேல்பக்கமாக போடப்பட்டிருந்த இரும்பு தகடு உடைந்து, அந்த பெண் பஸ்ஸுக்கு கீழேத் தள்ளப்பட்டார். இந்தக் காட்சியானது அங்கிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவமானது மாநிலம் விட்டு மாநிலத்தில் நடைபெற்றதால், தமிழக அரசு பஸ்ஸின் மீதான பார்வை மிகமோசமாக மாறியது. இதனால், பலர் தமிழக அரசு பேருந்தில் பயணிக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிப்பதைப் போல் உணர்வதாக கருத்து தெரிவித்தனர்.

இதுபோன்ற தரமற்ற பழையப் பேருந்துகளை உபயோகத்தில் வைத்திருப்பதற்கு, போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்குவதே காரணம் என போக்குவரத்துத்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், போக்குவரத்துத்துறையில் தலைவிரித்தாடும் ஊழலே இதற்கு முக்கியக் காரணம் என்று மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசுப் பேருந்தில் இதுபோன்று ஆபத்தான சூழல் நிலவுவதால், பெரும்பாலான மக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனேவே நஷ்டத்தைச் சந்தித்து வந்த அரசு போக்குவரத்துக் கழகம், இதன்காரணமாக மேலும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் ஒரு பக்கம் போக்குவரத்துக் கழகத்தைச் சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு, தெழிலாளர்கள் தரப்பில் நியாயமான காரணம் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான், மக்களை அரசுப் பேருந்துகள் பக்கம் இழுக்கும் விதமாக அதிநவீன பேருந்துகளைப் போக்குவரத்துத்துறை பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது. தனியார் பேருந்துகளை மிஞ்சும் வகையில் தற்போது களமிறக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

புதிய பேருந்துகளை போக்குவரத்து கழகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக சென்னை-வேலூர், சென்னை-திருவண்ணாமலை மார்க்கத்திற்கு புதிதாக ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த பஸ்கள் முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்லும். அதன்பின்னர், அங்கிருந்து குறிப்பிட்ட மார்க்கத்திற்குப் புறப்படும். அவ்வாறு, இந்த பேருந்துகள் தனது முதல் முறை பயணத்தை தொடங்குவதால், கட்டணமின்றி இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குளிர்சாதனப் பேருந்துகள் வழக்கமான பேருந்துகளைப் போன்று இல்லமால், அதாவது இரு புறமும் இரண்டிரண்டு இருக்கை அமைப்பைக் கொண்டு இல்லாமல், ஒரு பக்கம் மூன்று இருக்கையும், மறு பக்கம் இரண்டு இருக்கையையும் கொண்ட அமைப்பில் இருக்கின்றது. இந்த இருக்கைகள் நீண்ட தூரம் செல்பவர்களுக்கு சொகுசான பயணத்தை ஏற்படுத்தும் வகையில், புஷ்பேக் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்கு அறிவிப்பு செய்யும் விதமாக மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, இருக்கைக்கு நேராக அமைக்கப்பட்டிருக்கும் ஏசியின் திசையை மாற்றியமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து இருக்கைகளுக்கும் செல்போன் சார்ஜர், எல்இடி மின்விளக்கு ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, அவசரகால வழி, முன் மற்றும் பின் பக்க படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள், ரிவர்ஸ் எடுக்கும்போது எச்சரிக்கும் சென்சார் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்த பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன.

சென்னைக்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்திற்கு 198 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 160 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 134 பேருந்துகள் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் போக்குவரத்து கழகத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 316 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications