மக்களின் நலனுக்காக ஜெர்மன் வங்கியை நாடிய எடப்பாடி: எதற்காக தெரியுமா?
மாசுபடுதல் என்னும் கொடிய நோயின் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கத் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள்வது என்பது மிகவும் சவலான விஷயமாக உள்ளது. இதனால், மாசுபாடுதலைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதேபோல, மாசுபாடுதலுக்கு இந்தியா விதிவிலக்கல்ல, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் மாசுற்று காணப்படுகிறது. ஆகையால், இந்திய அரசும் நாடு முழுவதும் மாசினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒருபடியாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசினை கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளன.
அதன்படி, பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, கர்நாடக அரசு சமீபத்தில் பெஸ்காம் என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இ-சார்ஜ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்பந்தம் போட்டது.
இதைத்தொடர்ந்து, மக்களின் பயன்பாட்டுக்காக அரசு பேருந்துகளில் மின்சார பஸ்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, 3 ஆயிரம் மின்சார பஸ்களை வாங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசும் மாசுகட்டுப்பாடு முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதற்காக 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது,

மாநிலத்தில் மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் வங்கி மற்றும் மின்சார பேருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே பல்வேறு வியாதிகளை இது பரப்பி வருகிறது. இவற்றைத் தவிர்க்கும் விதமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications









