"அமைச்சர் பொன்முடிக்கு ஒரு சட்டம் நடிகர் விஜய்க்கு ஒரு சட்டமா?" இந்த வீடியோவை வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற போது அமைச்சர் பொன்முடியின் கார் சிக்னலில் நிக்காமல் சென்ற நிலையில் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மட்டும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். என்ன நடந்தது? உண்மையான சம்பவம் என்ன? விரிவாகக் காணலாம் வாருங்கள்.
தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவருக்குச் சொந்தமான இடங்களில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனைகளை நடத்தினர். தற்போது இது தமிழகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் இவரிடம் விசாரணை செய்ய அமலாக்கத் துறையினர் இவரை அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது. இதற்காக அமைச்சர் பொன்முடி தனது காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அவர் செல்லும் போது அவரது ஆட்களும் வேறு கார்களில் இவரை பின்தொடர்ந்தனர்.
அப்பொழுது சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது அமைச்சரின் கார் சிக்னலை மதிக்காமல் சாலையில் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் கூட வெளியாகி வைரலாக பரவியது. பலர் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் இப்படியாகத் தனது ரசிகர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவரது கார் சிக்னலில் நிற்காமல் சென்றது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான போது சென்னை போலீசார் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தனர்.
அதன்படி நடிகர் விஜய்யும் ரூபாய் 500 அபராதம் செலுத்தினார். தற்போது அமைச்சர் பொன்முடியின் கார் சிக்னலை மதிக்காமல் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பல நடிகர் விஜய்க்கு ஒரு சட்டம் அமைச்சருக்கு ஒரு சட்டமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் விஜயின் ரசிகர்கள் இது குறித்து சென்னை போலீசாரிடம் சமூகவலைத்தளம் மூலமும் ஆன்லைன் மூலமும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மீது போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக அமைச்சருக்கு சைரன் வைத்த வாகனம் வழங்கப்படும். அந்த வாகனம் போக்குவரத்து சிக்னலுக்கு நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும் அமைச்சர் தற்போது சென்ற வாகனம் அவர்கள் சொந்த வாகனம் ஆகும். அரசின் வாகனம் இல்லை அந்த வாகனத்தில் சைரனும் இல்லை இதனால் இந்த வாகனம் சாதாரணமான வாகனமாகவே கருதப்பட வேண்டும் இதற்கான தனிப்பட்ட எந்த விதிவிலக்குகளும் வழங்கப்படக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
இது குறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது அவர்களுக்கு அமைச்சரின் கார் விதிமுறை மீறிய சம்பவம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை எனவும், அப்படி மீறி இருந்தால் கட்டாயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் சென்னை போலீசார் சார்பில் அமைச்சர் பொன்முடியின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது சாலையில் செல்லும்போது அனைவரும் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பிட்ட சம்பவத்தில் அமைச்சர் கார் சிக்னலை தாண்டி செல்லும்போது அங்கு ஒரு போலீசார் அதை அனுமதி அளிக்கும் வகையில் நடந்து கொண்டார். இது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது அவர் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.


Click it and Unblock the Notifications









