7000 புது பஸ்களுக்கு ஆர்டர் ரெடி! ஓட்டை உடைசல் எல்லாம் இனி தூர போட வேண்டியது தான்!
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்காக 1000 எலெக்ட்ரிக் பஸ்கள் உட்பட இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 7000 புதிய பஸ்களை வாங்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் ஓட்டை, உடைசல் பஸ்கள் எல்லாம் இனி மாற்றப்பட்டு புதிய பஸ்களாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முழுவதும் போக்குவரத்து கழகங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் எல்லாம் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருவதாக நீண்ட ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வப்போது ரோட்டில் பஸ்கள் பிரேக் டவுனாகி நிற்பது, மழை பெய்யும் போது பஸ்க்குள் தண்ணீர் அருவி போல கொட்டுவது, பஸ் வேகமாக செல்லும்போது சீட்டு வெளியே தூக்கி வீசப்படுவது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படியான சம்பவங்கள் ஏன் நடக்கிறது? என ஆய்வு செய்து பார்க்கும்போது பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மெட்ரோ பொலிட்டன் மற்றும் மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட ஆறு போக்குவரத்து களங்களில் மொத்தம் 2060 பஸ்கள் இருக்கிறது. அதில் தினம்தோறும் 18,728 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 10,582 பஸ்கள் மிகவும் பழைய பஸ்களாக இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு பஸ் 10,000 கிமீ ஓடினால் அது பழுதாவது என்பது 10சதவீதம் வரை இருந்தது. தற்போது பஸ்கள் பராமரிப்பு அதிகம் செய்யப்பட்டுள்ளதால் இந்த 10,000 கிலோமீட்டர் பஸ் பழுதாகும் சம்பவம் 1-2சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் தற்போது போக்குவரத்துக் கழகங்கள் பஸ்களை அதிகம் பராமரிக்க துவங்கி விட்டனர். என்னதான் பராமரித்தாலும், நாட்கள் செல்ல செல்ல நீண்ட நாட்கள் இது இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் பல ஆயிரம் புதிய பஸ்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டிருந்தது. 2024-25ம் நிதியாண்டில் 3000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர் நெருக்கடி காரணமாக போதுமான அளவு புதிய பஸ்களை ஆர்டர் செய்ய முடியாமல் போக்குவரத்து கழகங்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிதியாண்டில் தேவையான பஸ்கள் ஆர்டர் செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் உள்ளிட்ட மொத்தம் 7000 புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தமிழக முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் வழங்கப்பட்டு ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய பஸ்களுக்கு பதிலாக இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தினம் தோறும் 1.76 கோடி மக்கள் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் 51.47 லட்சம் பயணிகள் பெண்களாக இருக்கிறார்கள். இவர்கள் 7179 சாதா பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள் என்பது மற்றொரு கூடுதல் தகவலாக இருக்கிறது. இந்நிலையில் தான் போக்குவரத்து கழகங்களுக்கான புதிய பஸ்களை வாங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்கள் எல்லாம் மிக மோசமான நிலையில் இருப்பதாக நீண்ட ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகார் இருக்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக இந்த புதிய 7000 பஸ்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பழைய பஸ்கள் முறையாக பராமரிப்பு செய்யப்பட்டாலே பல்வேறு பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன தற்போது 7030 புதிய பஸ்களுக்காக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் பஸ்களின் சராசரி வயது 9ஆக இருக்கிறது. இந்த பஸ்கள் வந்தால் அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரு முக்கிய பிரச்சினை இருக்கிறது. வட தமிழகங்களில் ஓடி பழுதான பஸ்கள் எல்லாம் வரிசையாக தென்தமிழக கழகங்களுக்கு மாற்றி விடப்படுகின்றன. இப்படியாக தென் தமிழகத்தில் பல்வேறு பஸ்கள் பழுதடைந்த பஸ்களாக இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பஸ்களுக்கு பதிலாக பழைய பஸ்களை மாற்றி விடாமல் புதிதாக வாங்கும் பஸ்களை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









