பாரா கிளைடரை சொந்தமாக தயாரித்து சாதித்த திண்டுக்கல் இளைஞர்!
பழனி அருகே வயலூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து இளைஞர் ஒருவர் பாராகிளைடரை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

பழனி அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் அ.ராஜ ஞானப்பிரகாசம்[35]. எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய இவர் தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் இறங்கிவிட்டார். மேலும், ஊராட்சிகளில் ஒப்பந்தப் பணிகளையும், நண்பரின் லேத் பட்டறையிலும் வேலை செய்தார்.

இந்த நிலையில், வானில் தனியாக பறக்க வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சொந்தமாக பாராகிளைடரை உருவாக்க முடிவு செய்தார். போதிய படிப்பறிவு, அனுபவம் இல்லாவிட்டால் கூட விடா முயற்சியால் தனது பாராகிளைடர் தயாரிப்பை துவங்க உறுதி பூண்டார்.

தனது 23ம் வயதில் இதற்கான திட்டங்களுடன் பாராகிளைடரை உருவாக்கத் துவங்கினார். லேத் பட்டறையில் பெற்ற அனுபவம் மற்றும் தனது தீராத பாராகிளைடர் ஆசையால் ஓய்வு நேரங்களில் இந்த பாராகிளைடரை உருவாக்குவதில் தீவிர முயற்சிகளை செய்தார்.
குறிப்பு: மாதிரி படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சொந்த பாராகிளைடரை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," சிறு வயதிலிருந்தே வானில் தனியாக பறக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனவே, பாராகிளைடரை சொந்தமாக உருவாக்க முடிவு செய்தேன்.

யூ-ட்யூப் வீடியோக்களையும், பாராகிளைடர் தயாரிப்பு முறைகள் பற்றி புத்தகங்களை படித்து இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கினேன். பல முறை தோல்வியடைந்தாலும், 12 ஆண்டுகள் விடாத முயற்சியின் பலனாக தற்போது பாராகிளைடரை உருவாக்கி விட்டேன்.

பாராகிளைடருக்கு தேவையான உதிரிபாகங்களை ஆன்லைனில் வாங்கினேன். வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க ரூ.10 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், நான் வெறும் ரூ.50,000ல் இந்த பாராகிளைடரை உருவாக்கி உள்ளேன்.

ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் விதிமுறைகளின்படி நம் நாட்டில் 25,000 அடி உயரம் வரை பறக்க அனுமதி உள்ளது. ஆனால், நான் அதிகபட்சமாக 7,000 அடி உயரம் வரை உயரம் மட்டுமே பறந்து செல்கிறேன். இந்த பாராகிளைடரில் காற்றின் வேகத்தை அறிந்து கொள்வதற்கான அல்டி மீட்டர், உயரத்தை தெரிந்து கொள்வதற்கான அனிமா மீட்டர்களை பொருத்தி உள்ளேன்.

இந்த பாராகிளைடரில் ஒருவர் அல்லது இரண்டு பேர் செல்ல முடியும். இதில், 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இதில், தொடர்ந்து 4 மணிநேரம் பறக்க முடியும். மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லலாம். 30 அடி காலி இடம் இருந்தாலே, இந்த பாராகிளைடரை மேலே எழுப்பவும், தரை இறங்கவும் முடியும்.

மேலும், மத்திய விமான போக்குவரத்துத் துறையில் அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டேன். விமான நிலையங்களுக்கு 40 கிமீ சுற்றளவில் மட்டுமே பறக்கக்கூடாது. அதனை பின்பற்றி வருகிறேன். எனது பாராகிளைடரில் பறந்து செல்வதை பார்த்து கிராமத்தினரும், நண்பர்களும் ஆச்சரியம் தெரிவிப்பதுடன், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,"என்று கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் நெரிசல் மிகுந்த போக்குவரத்து நகரங்களில் இயக்குவதற்கான பயணிகள் ட்ரோன்களையும், பறக்கும் கார்களையும் பல நிறுவனங்கள் பல கோடிகளை ரூபாய்களை கொட்டி தயாரித்து வரும் நிலையில், யாருடைய உதவியும் இல்லாமல் பாராகிளைடரை உருவாக்கி உள்ளார் ராஜா ஞானப்பிரகாசம். அவருக்கு எமது வாழ்த்துகள்!!
குறிப்பு: மூன்றிலிருந்து எட்டாவது ஸ்லைடு வரை மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Source: Tamil Hindu
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications








