டோல்கேட் மூலம் இருமடங்கு அதிகரிக்கும் வருவாய்... அதிர்ச்சியில் தனியார் நிறுவனம்...
சுங்கசாவடி மையங்களில் வசூலிக்கப்படும் வரியால் நாட்டின் வருவாய் இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தனியார் நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றை கட்டமைத்து, பராமரிக்கும் பணிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு செலவாகும் தொகையை சுங்கசாவடிகள் மூலம் பயனாளிகளிடம் இருந்து வரியாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், நெடுஞ்சாலைகளை பராமரிப்பு பணிக்காக குத்தகை எடுத்திருக்கும் சில தனியார் நிறுவனங்கள் முறையாக சாலைகளை பராமரிப்பு செய்வதில்லை. இதனால் நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மேலும், சில நேரங்களில் பெரும் விபத்துகளும் நேர்கின்றன.

ஆனால், வரி வசூலை மட்டும் அந்த நிறுவனங்கள் நிறுத்துவதில்லை. தொடர்ந்து, அவர்களின் குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக அவ்வப்போது சுங்கசாவடிகள் ஊழியர்களுக்கும், பயனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படுகிறது.

மேலும், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்பவர்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

இருப்பினும், இதுபோன்று நடைபெறும் எந்த நிகழ்வுகள் குறித்தும் கவலைப்படாமல், சுங்கசாவடிகள் கட்டணக் கொள்ளை ஈடுபட்டுதான் வருகின்றன.

நாடு முழுவதும் செயல்பட்டுவரும் சுங்கசாவடி மையங்களால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் நிதி வருவாய் ஈட்டப்படுகிறது.

மேலும், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நாட்டில் வர்த்தகம் சார்ந்த வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால், 2019-20 ஆம் நிதியாண்டில் சுங்கசாவடிகள் மூலம் பெறப்படும் நிதி வருவாயானது இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தனியார் ஆய்வு நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் கூறியதாவது, "நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வர்த்தக ரீதியாக இயங்கும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளை கனரக சரக்கு வாகனங்கள் 65 முதல் 70 சதவிகிதமும், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் 30 முதல் 35 சதவிகிதமும் பயன்படுத்துகின்றன.

இதனால் சுங்கசாவடிகளில் வசூலிக்கப்படும் வரியானது வரும் 2019-20 ஆம் நிதியாண்டில் இரு மடங்காக அதிகரித்து, அரசுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








