ஒரு பைசா கூட கட்ட வேணாம்! இன்னிக்கு நைட்ல இருந்து டோல்கேட் கட்டணம் இல்ல! இதுக்காகதான் இத்தன வருஷமா வெயிட்டிங்!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று டோல்கேட் (Toll Gate). தேசிய நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகள் பெரிதாக செய்யப்படாத நிலையில், விதிமுறைகளை மீறி டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். கட்டணம் வசூல் செய்யப்படுவதை எதிர்த்து, டோல்கேட்களில் பலமுறை போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டு கொண்டேதான் உள்ளது. டோல்கேட்களில் கட்டணம் தவிர, மற்றொரு முக்கியமான பிரச்னையையும் வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர்.
அது போக்குவரத்து நெரிசல் ஆகும். ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட, டோல்கேட்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே கட்டணத்தையும் கொடுத்து விட்டு, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும், வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், இனிமேல் வாகன ஓட்டிகள் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற அதிரடியான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது இந்தியா முழுமைக்கும் கிடையாது. மும்பை (Mumbai) நகருக்கு மட்டும்தான். இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை நகருக்குள் நுழையும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக, தாஹிசார், முலுண்ட், வாஷி, அய்ரோலி மற்றும் தின்ஹாந்த் நாகா ஆகிய 5 இடங்களில் டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்துவதில் இருந்து, இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு (Light Motors Vehicles) தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 14) நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த 5 டோல்கேட்களிலும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணம் 45 ரூபாயாக இருந்தது.
இனிமேல் அந்த கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டியதில்லை. இது மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் (Maharashtra Election) விரைவில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து, இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் அம்மாநில முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''மும்பை நகரின் நுழைவாயில்களில் உள்ள டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் முதல் அமைச்சராக உள்ள காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது லட்சக்கணக்கான இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு பயன் அளிப்பதாக அமையும். இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால், வாகன ஓட்டிகளின் நேரமும் சேமிக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும். இந்த முடிவு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பொதுமக்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எது எப்படியோ இந்த முடிவு வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








