இது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா?
டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி ஒன்றை செய்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட்களில் வாகனங்கள் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல சில சமயங்களில் கால தாமதம் ஆவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே சில சமயங்களில் வாக்குவாதம், கைகலப்பு ஆகியவையும் ஏற்படுகிறது.

இதன் விளைவாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. எனவே டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் பாஸ்ட்டேக் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்ட்டேக் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்துவது எப்படி? என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

எனினும் அது தொடர்பாக சிறிய விளக்கத்தை மட்டும் வழங்குகிறோம். பாஸ்ட்டேக் என்பது ஒரு ஸ்டிக்கர். இதனை வாகனங்களின் விண்டுஷீல்டில் ஒட்டி கொள்ள முடியும். குறிப்பிட்ட தொகையை செலுத்திய பின் பாஸ்ட்டேக் அட்டையை உங்களால் பெற்று கொள்ள முடியும். டோல்கேட்கள் மற்றும் அமேசான் போன்ற ஷாப்பிங் தளங்களில் பாஸ்ட்டேக் கிடைக்கிறது.

சில பெட்ரோல் பங்க்குகளிலும் கூட பாஸ்ட்டேக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்ட்டேக்கை உங்களின் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் வாலட் ஆகியவற்றுடன் இணைத்து கொள்ள முடியும். இதன் பின் நீங்கள் ஒவ்வொரு முறை டோல்கேட்டை கடக்கும்போதும் வங்கி கணக்கு அல்லது வாலட்டில் இருந்து அதற்குரிய கட்டணம் கழித்து கொள்ளப்படும்.

டேக்கை 'ரீட்' செய்வதற்காக டோல்கேட்களில் சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிறப்பு உபகரணங்கள் நொடிப்பொழுதில் பாஸ்ட்டேக்கை ரீட் செய்து விடும். இதன்பின்பு பூம் உடனடியாக திறந்து கொள்ளும் என்பதால், கட்டணம் செலுத்த காத்திருக்காமல் நீங்கள் டோல்கேட்டை கடந்து வேகமாக சென்று கொண்டே இருக்கலாம்.

எனவே பாஸ்ட்டேக் முறை மூலமாக வாகன ஓட்டிகள் டோல்கேட்களில் காத்திருக்கும் நேரம் குறையும். இதன் காரணமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் தவிர்க்கப்படும். அத்துடன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். எனவே பாஸ்ட்டேக் முறைக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து டோல்கேட்களிலும் பாஸ்ட்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். 'கேஷ் பேமெண்ட்' ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இதன் மூலமாக பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க பாஸ்ட்டேக் முறைக்கு மாறி கொள்ளும்படி வாகன உரிமையாளர்களுக்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டோல்கேட்களின் அருகே பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் ரேடியோ போன்ற ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் போக்குவரத்து சங்கங்கள் உடனான கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, பாஸ்ட்டேக் கட்டாயம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் என்னதான் விழிப்புணர்வு மேற்கொண்டாலும், டிசம்பர் 1ம் தேதியன்று டோல்கேட்களில் குழப்பங்களும், வாக்குவாதங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

இதனால் அன்றைய தினம் டோல்கேட்களில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் கட்டாயம் செய்யவுள்ள பாஸ்ட்டேக் முறையினால் பல்வேறு நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் பாஸ்டேக் லேன்களிலும் கூட நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே பாஸ்ட்டேக் தொடர்பான உங்கள் கருத்துக்களையும், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அதை கட்டாயம் செய்யவுள்ள மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான கருத்துக்களையும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரிவியுங்கள்.


Click it and Unblock the Notifications








