டோல்கேட் ரசீதுக்கு பின்னால் இருக்கும் உங்கள் உரிமைகள் தெரியுமா? இனி தூக்கி எறியாம பத்திரப்படுத்துங்க
டோல்கேட்களில் வழங்கப்படும் ரசீதுகளுக்கு பின்னால் இருக்கும் உங்கள் உரிமைகள் என்னென்ன? என தெரிந்தால், இனி அவற்றை நீங்கள் தூக்கி எறிய மாட்டீர்கள்.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 500 டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசூலிக்கப்படும் கட்டணம், வாகன ஓட்டிகளுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து வருகிறது. டோல்கேட்களில் கட்டண கொள்ளை அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே டோல்கேட்களை மூட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் வாகன ஓட்டிகளின் கோரிக்கை நிறைவேறுவதாக இல்லை. எனவே வேண்டா வெறுப்பாக கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டுதான் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி கொண்டுள்ளனர். இது போதாதென்று சில சமயங்களில் நெடுஞ்சாலை பயணங்கள் மோசமான அனுபவத்தை தந்து விடுகின்றன.

வாகனம் திடீரென பஞ்சர் ஆகிவிட்டாலோ அல்லது பழுதாகி விட்டாலோ என்ன செய்வது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் விழி பிதுங்கி விடுகின்றனர். இதுதவிர திடீரென எரிபொருள் தீர்ந்து விட்டாலும், வாகன ஓட்டிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனினும் இவை அனைத்திற்கும் மிக எளிமையான தீர்வு ஒன்று உள்ளது.

நீங்கள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு பெறும் ரசீதுதான் அதற்கு தீர்வு. ஆம், நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்துவதில்லை. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உங்களுக்கு உதவுவதற்கும் சேர்த்துதான் கட்டணம் செலுத்தி கொண்டுள்ளீர்கள். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை.

டோல்கேட்களில் வழங்கப்படும் கட்டண ரசீது உங்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும். இந்த ரசீதின் பின்புறத்தில் தொடர்பு எண் வழங்கப்பட்டிருக்கும். உங்களுக்கோ அல்லது உங்களுடன் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கோ மருத்துவ உதவி தேவைப்பட்டால், நீங்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்களிடம் இருந்து தகவல் கிடைத்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து சேரும். நெடுஞ்சாலைகளில் பயணத்தை தொடங்கும் முன்பாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் எரிபொருளை நிரப்பி கொண்டுதான் செல்கின்றனர். இல்லாவிட்டால் இடையில் உள்ள ஏதேனும் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பி கொள்கின்றனர்.

எனினும் சில சமயங்களில் கவன குறைவு காரணமாகவோ அல்லது தவறான கணக்கீடு காரணமாகவோ எரிபொருள் தீர்ந்து விடுகிறது. அவ்வாறான சமயங்களில் அருகில் பெட்ரோல் பங்க் இருந்து விட்டால் பிரச்னை இல்லை. ஆனால் பெட்ரோல் பங்க் இல்லாவிட்டால் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும். இருந்தபோதும் இந்த பிரச்னையை சரி செய்யவும் நீங்கள் டோல்கேட்டை அணுகலாம்.

பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் உங்கள் வாகனம் நின்று விட்டால், நீங்கள் தகவல் கொடுக்கலாம். உடனே குறிப்பிட்ட அளவு எரிபொருளை உங்களுக்காக கொண்டு வந்து விடுவார்கள். அதற்கான பணத்தை மட்டும் கொடுத்து உங்கள் பயணத்தை நீங்கள் மேற்கொண்டு தொடரலாம். வாகனம் பஞ்சர் ஆனாலும் அல்லது பழுதானலும் இதே வழிமுறைதான்.

இதற்கென இன்னொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை தொடர்பு கொண்டால், ஆட்கள் வந்து விடுவார்கள். பஞ்சரோ அல்லது பழுதோ அதை சரி செய்து கொடுத்து விடுவார்கள். எனவே இனிமேல் டோல்கேட் கட்டண ரசீதை எக்காரணத்தை கொண்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள். அவசர கால சூழ்நிலைகளில் அது உங்களுக்கு உதவும்.

மேலே குறிப்பிட்டுள்ள சேவைகளுக்கும் சேர்த்துதான் சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தி வருகிறோம் என்ற விஷயம் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரிவது கிடையாது. எனவே டோல் பிளாசாக்கள் பற்றிய இந்த தகவல் பயன் அளிப்பதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








