Toll Plaza-க்களை 6 மாதத்தில் மூட முடிவு! இப்படி ஒரு மேட்டரை தான் மக்கள் எதிர்பார்த்தாங்க
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கச் சுங்கவரி செலுத்த வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியாகச் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டண வசூல் முறையில் சமீப காலமாகப் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணம் மட்டும் செலுத்தினால் போதும்.
ஆனால் அதற்குப் பிறகு சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஃபாஸ்ட் டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்து அதைக் கட்டாயப்படுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் கட்டாயம் பாஸ்ட் டேக்கை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்று 99 சதவீதமான வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் வந்துவிட்டது.

என்னதான் ஃபாஸ்ட்டேக் வந்தாலும் அது எதற்காகக் கொண்டு வரப்பட்டதோ அந்த பிரச்சனை மட்டும் இன்னும் தீரவில்லை. தற்போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நிற்கும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான். இருக்கிறது. எதிர்பார்த்த அளவிற்குப் பலனை ஃபாஸ்ட்டேக் தரவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு இந்த சுங்கச்சாவடி வசூல் முறையில் மாற்றம் கொண்டு வரத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது இருந்துவரும் ஃபாஸ்ட் டேக் முறையிலான சுங்கச்சாவடி கட்டண வசூலை மாற்றி நம்பர் பிளேட் ரீடிங் கருவிகள் அல்லது ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறையைக் கொண்டு வரலாம் என ஆலோசனை நடத்தியது.
இதில் ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் தொழிற்நுட்ப சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
அப்பொழுது அவர் அடுத்த 6 மாதத்தில் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும் என்றும், சுங்கச்சாவடி வசூல் முறைக்குப் பதிலாக ஜிபிஎஸ் கருவிகளைக் கொண்டு வாகனங்களை டிராக் செய்து அதன் மூலம் வசூல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனப் பேசினார். இதன் மூலம் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் எல்லாம் விரைவில் மூடப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா தற்போது சுங்கச் சாவடி மூலம் ஆண்டிற்கு ரூ 40 ஆயிரம் கோடியை வருமானமாகப் பெற்று வருகிறது. ஆனால் இது இன்னும் 2-3 ஆண்டுகளில் ரூ1.40 லட்சம் கோடியாக மாறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் சராசரியாக ஒரு சுங்கச்சாவடியில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 8 நிமிடமாக இருந்தது.
ஃபாஸ்ட்டேக் வந்ததும் இது வெகுவாக குறைந்துள்ளது. 2020-21, 2021-22 ஆகிய காலகட்டங்களில் வாகனங்களின் காத்திருப்பு காலம் 47 நொடிகளாக மாறிவிட்டது. இவ்வளவு பெரிய மாற்றம் வந்தாலும் முக்கியமான பிரச்சனை அதிகமாக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் தான் இருக்கிறது.
குறைவான வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் அதிக கூட்ட நெரிசல் இல்லை. அங்கு வெறும் 10 நொடிகளில் கூட கடந்து விட முடிகிறது. ஆனால் அதிக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் 2-3 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை இன்றும் இருக்கிறது.
இது பெரும்பாலும் பெருநகரங்களுக்கு உள்ள நுழைவு பகுதியில் உள்ள சுங்கசாவடிகளில் தான் அதிகம் இருக்கிறது. இதன் காரணமாகவே சுங்கச்சாவடிகளையே அகற்றிவிட்டு ஜிபிஎஸ் முறையிலான டோல் கலெக்ஷன் சிஸ்டத்திற்கு மத்திய அரசு மாறுகிறது. இதற்கிடையில் தற்போது முயற்சி திட்டமாக ஒரு முயற்சியையும் செய்து வருகிறது.
சில சுங்கசாவடிகளில் நம்பர் பிளேட் ரீடிங் கேமராவை பொருத்தி அதன் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட்களை ரீட் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இந்த சிஸ்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பதால் ஜிபிஎஸ் சிஸ்டத்தையே நடைமுறைக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன? இந்தியாவில் சுங்கச்சாவடி வசூல் முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பது உண்மை தான். ஆனால் இதை எப்பொழுது அமல் படுத்துகிறோம் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். நீண்ட நாட்களாக அமைச்சர்கள் பேச்சிலேயே இதைச் சொல்லி வருகின்றனர். ஆனால் அமலுக்கு வந்த பாடில்லை.
ஜிபிஎஸ் முறையிலான வசூல் என்றால் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கட்டாயமாக்கப்படும் நிலை வரும். அப்படி வந்தால் அந்த ஜிபிஎஸ் கருவியை அரசு தளத்தில் இணைக்கப்பட வேண்டும். இந்த தகவல்களின் பாதுகாப்பு தன்மை குறித்த கேள்விகள் எழும். இதற்குத் தெளிவான விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications