சுங்க கட்டணம் 5% வரை அதிகரித்துள்ளது! ஏப்ரல் மாசமே வரவேண்டியது இன்னிக்கு வந்திருக்குது!
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தற்போது செலுத்தி வரும் கட்டணத்திலிருந்து மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்க சாவடிக்கும் உள்ள வருமானத்திற்கு ஏற்ப இந்த கட்டண உயர்வு என்பது அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்த வேண்டிய கட்டண உயர்வு தான் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவின் நீண்ட தூர போக்குவரத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலைகள் மிகப்பெரிய முதுகெலும்பாக இருக்கிறது என்றே சொல்லலாம். நீண்ட தூர பயணத்தை குறுகிய நேரத்தில் பயணம் செய்ய இந்த தேசிய நெடுஞ்சாலை உதவுகிறது. இதனால் வாகனங்களில் பயணம் செய்யும் பலர் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய தான் விரும்புகிறார்கள்.

இப்படியாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பைக் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் செய்ய சுங்க கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்க சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள 98 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் ஆங்காங்கே பாஸ்ட் டேக் கார்டுகளை ரீடு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரடியாக வாகன உரிமையாளரின் ஃபாஸ்ட் டேக் கார்டு வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.

இந்நிலையில் இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலை குறியீட்டை மையமாக வைத்து உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய போக்குவரத்து துறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் தேர்தல் நடப்பது காரணமாக இந்த கட்டண உயர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 3ம் தேதி இன்று முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி அமலுக்கு வர வேண்டிய கட்டண உயர்வு இன்று ஜூன் 3ம் தேதி தான் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 34 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டணம் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு என்பது மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் ஒரு வாகனத்திற்கு ரூ5-ரூ25 வரை தற்போது செலுத்தி வரும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால் சுங்க கட்டணத்திற்கு என்று குறிப்பிட்ட பட்ஜெட்டை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த பட்ஜெட்டின் அளவு தற்போது அதிகரிக்கும்.
இந்த ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண உயர்வு 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பிறகு 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மீண்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். இந்த கட்டண உயர்வு என்பது ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இருக்கும். சிபிஐ அடிப்படையிலான குறியீடுகளை வைத்து முடிவு செய்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சுங்க கட்டணம் என்பது மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. இதை குறைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறை எந்த சுங்க கட்டணத்தை குறைப்பதற்கான வழிகளை கையாள வேண்டும்.


Click it and Unblock the Notifications









