ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. எந்தெந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது? என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் முதுகெலும்பாக தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தேசிய நெடுஞ்சாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகவும் குறைந்த செலவிலும் நகர்வதன் மூலம் நமது பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து விடுகிறது.

இப்படியாக இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதலும் சில சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் இந்த கட்டண உயர்வு என்பது அமல்படுத்தப்படும். அதன்படி ஏப்ரல் 1ம் தேதி வர உள்ள நிலையில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டண உயர்வு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கசாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 5 சுங்கச்சாவடிகளில் மட்டுமே தற்போது கட்டண உயர்வு என்பது அமலுக்கு வருகிறது. மற்ற சுங்கசாவடிகளில் எந்தவித கட்டண மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இதே கட்டணத்தில் செயல்படுகிறது. மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணமும் மற்றும் ஒவ்வொரு முறை பயணிப்பதற்கான கட்டணமும் மாறுபடுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கெதி, திருச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு என்பது அமலுக்கு வருகிறது.
கட்டண உயர்வை பொருத்தவரை மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணத்தில் ரூபாய் 100 முதல் 400 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் திரும்பி வருவதற்கான கட்டணம் என இரண்டும் சேர்த்து ரூபாய் ஐந்து முதல் 20 வரை கட்டண உயர்வு என்பது ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் நீக்கி விட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது. விரைவில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் போது தற்போது உள்ள கட்டணத்தை விட குறைவான கட்டணமே செலுத்த வேண்டிய தேவை இருக்கும் தற்போது நீங்கள் சாலையில் எவ்வளவு தூரத்தை பயன்படுத்தினாலும் முழுமையான தூரத்திற்கான சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும். ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டணம் வசூல் முறையை அமலுக்கு வந்தால் பயன்படுத்திய தூரத்திற்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் நடந்து வரும் சூழ்நிலையில் பல அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால் சுங்க கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்து வருகிறது. இந்த தேர்தலில் சுங்ககட்டணம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









